அனர்த்தத்தில் கண்டி மாவட்டத்தில் ஹக்கீம்,அதாவுல்லாஹ்,ஹிஸ்புல்லாஹ் ஒன்றாக களத்தில்
எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA)- ஓட்டமாவடி.
கண்டி மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண் சரிவு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை விரைவாக மீட்டெடுக்கும் நோக்கில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தொடர்ச்சியாக களப் பணியில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிடுவதுடன், அடுத்தகட்ட களப் பணிகளைத் திட்டமிட்ட அடிப்படையில் அவர் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
செவ்வாய்க்கிழமை (09) காலையிலிருந்தே, ரவூப் ஹக்கீம் அவர்கள் அனர்த்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வீடுகள், வியாபார நிலையங்களைத் துப்புரவு செய்வதிலும், வீதியோரங்களில் மலைபோல் குவிந்துள்ள குப்பைகளை அகற்றுவதிலும் தனது முழு கவனத்தையும் செலுத்தினார்.
தனது கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன், தேவையான உபகரணங்களையும், ஆளணியையும் பெற்று, கெலிஓயா கலுகமுவ , கம்பளை ஆகிய பிரதேசங்களில் துப்புரவுப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்தார்.
வெளிப் பிரதேசங்களிலிருந்து தேவையான ஆளணிகள், வாகனங்கள், உபகரணங்களை வரவழைத்து ஒருங்கிணைப்பதிலும் அவர் தொடர்ந்து கவனம் செலுத்தினார்.
கம்பளையில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சாலியபுர பிரதேசத்திற்கு போதிய உதவிகள் கிடைக்கவில்லை என்ற தகவல் கிடைத்தவுடன், உடனடியாக தனது குழுவில் ஒரு பகுதியினரை அங்கு அனுப்பி வைத்தார்.
கலுகமுவ பிரதேசத்தில் குப்பைகளைக் கொட்டுவதற்காக ஜும்ஆ பள்ளிவாசல் அடையாளப்படுத்திய இடத்தில், பொலிஸாரால் தடைகள் ஏற்படுத்தப்பட்டதால், குப்பைகளை அகற்றும் பணிகளில் சில தாமதங்கள் ஏற்பட்டன.
ஹக்கீமின் வேண்டுகோளின் பேரில் தேசிய காங்கிரஸ் தலைவரும்,முன்னாள் அமைச்சரும், அக்கறைப்பற்று மாநகர சபை மேயருமான அதாவுல்லாஹ் தலைமையிலான மாநகரசபை உறுப்பினர்கள்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஹிஸ்புல்லாஹ் தலைமையிலான காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள்.ஏறாவூர் நகர சபை தலைவர் எ.எஸ்.எம்.நளீம் தலைமையிலான குழுவினர் வந்திருந்தனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர், வாகனங்கள் மற்றும் கனரக இயந்திரங்களுடன் வருகை தந்திருந்தனர்.
கம்பளை நகரசபை தவிசாளருடன் கலந்துரையாடி, வெளியூர்களிலிருந்து கொண்டுவரப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தி குப்பைகளை அகற்றப்படுகின்றன.
ரவூப் ஹக்கீம் இப்பணிகளை மேற்பார்வை செய்வதிலும், தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொடுப்பதிலும் அதிக ஈடுபாட்டைக் காட்டி வருகின்றார்.
கம்பளை நகரசபையில் அவர் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினார்.பின்னர், சாலிய எல பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று, பாதிக்கப்பட்ட இடங்களை அடையாளப்படுத்தி, ஆலோசனைகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து கண்டி வீதி கம்பளையில் துப்பரவுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
பாலமுனை சஹ்வா மதரஸா உலமாக்களும் மாணவர்களும் வந்து துப்புரவுப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டனர். அவ்விடத்திற்குச் சென்ற ரவூப் ஹக்கீம் அவர்களின் பணிகளைப் பாராட்டினார்.
முஸ்லிம் கவுன்சிலின் கலந்துரையாடல்
கம்பளை நகர மஸ்ஜித் கலாசார மண்டபத்தில் நடந்தபோது ரவூப் ஹக்கீமூம், ஹிஸ்புல்லாஹ்வும் அதிலும் கலந்து கொண்டனர்.
துப்புரவுப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டன.
கம்பளை கண்டி வீதியில் ரவூப் ஹக்கீமின் ஆலோசனையின்படி, அக்கறைப்பற்று மாநகர மேயர் அதாவுல்லாஹ் தலைமையிலான குழுவினரால் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இப்பணியில் ஏறாவூர் நகர சபை வாகனங்களும் முதல்வரின் தனிப்பட்ட வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டன.
நள்ளிரவைத் தாண்டியும் குப்பைகளை அகற்றும் பணிகள் தொடர்ந்தன. ரவூப் ஹக்கீம் தன்னைப் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதுடன், அதாவுல்லாஹ், ஹிஸ்புல்லாஹ்,ஏறாவூர் நளீம் ஹாஜியார் தலைமையில் கலந்துகொண்ட அனைவரும் இப்பணியில் பங்குபற்றினர். இல்லவத்துர பிரதேசத்திலும் நள்ளிரவு தாண்டியும் பணிகள் தொடர்ந்தன.
கம்பளை நகர சபை தலைவர் உட்பட உறுப்பினர்கள், மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கண்டி மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்,மத்திய குழு உறுப்பினர்கள்ஏனைய மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்களும் இதில் இணைந்திருந்தனர்.
வெள்ளிக்கிழமையும் கலுகமுவை உட்பட துப்புரவுப் பணிகள் தொடர்ந்தன.





No comments