வெளிநாட்டு வேலைவாய்ப்பு காரியாலயத்தை கல்முனைக்கு கொண்டு வர பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்த ரஹ்மத் மன்சூர்
(எம். என். எம். அப்ராஸ்)
அம்பாறை மாவட்டத்தில் கரையோர பிரதேச மக்களின் நலன் கருதி கல்முனை மாநகர எல்லைக்குள் மிக நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் கிளைக் காரியாலயம் சில காரணங்களால் வேறு இடத்துக்கு மாற்றப்பட்ட நிலையில் இந்த அலுவலகத்தை மீண்டும் கல்முனைக்குக் கொண்டு வர வேண்டும் என கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதிமுதல்வரும்,ரஹ்மத் பவுண்டேசன் அமைப்பின் தலைவர் ரஹ்மத் மன்சூர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தவிசாளர் கோஸ்கலே விக்ரமசிங்க அவர்களிடம் கோரிக்கை விடுத்து மகஜரினை கையளித்தார்.
கல்முனை நகரில் இயங்கி வரும் பன்டா வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் தனது முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு,ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு கல்முனையில் நேற்று (13) இடம் பெற்ற போது மேற் குறித்த வேண்டுகோளை ரஹ்மத் மன்சூர் வேலைவாய்ப்பு பணியகத்தின் தவிசாளரிடம் முன்வைத்தார்.
இந் நிகழ்வு கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதிமுதல்வரும்,கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் முன்னெடுப்பில் இடம்பெற்றது.
விழாவின் பிரதம அதிதியாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தவிசாளர் கோஸ்கலே விக்ரமசிங்க பங்கேற்றார்.
விஷேட அதிதிகளாக மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணையகத்தின் ஜெனரல் லலீதாதீரே, கல்முனை பிரதேச செயலாளர் ஏ.ரி.எம்.அன்ஸார், இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் பணிப்பாளர்களான அர்ஷாத் பாரூக்,முகம்மது ஃபனூர், பிரதீப் ஜயசுந்தர,மயோன் குரூப் நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் ALFEA நிறைவேற்று சபை உறுப்பினர் றிஸ்லி முஸ்தபா மற்றும் அம்பாறை மாவட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத் தலைவர்கள்,பணியக அதிகாரிகள், மதகுருமார்கள், வர்த்தகர்கள்,புத்திஜீவிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இதன் போது கலந்து கொண்டனர்.









No comments