JobVibe.lk - Sri Lanka Job Portal

உலகில் 70 சதவீதமான கோடீஸ்வரர்கள் சுயதொழில் முயற்சிகளுடன் தொடர்பு பட்டவர்களாகவே காணப்படுகின்றனர். கலாநிதி இல்ஹாம் மரைக்கார் தெரிவிப்பு.

எம்.யூ.எம்.சனூன்

உலகில் 70 சதவீதமான கோடீஸ்வரர்கள் சுயதொழில் முயற்சிகளுடன் தொடர்பு பட்டவர்களாகவே காணப்படுகின்றனர் என அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளரும், பிரபல உளவியலாளருமான கலாநிதி

இல்ஹாம் மரைக்கார் தெரிவித்தார்.


வவுனியா பல்கலைக்கழகத்தின் வணிகக் கல்வி பீடத்தின் மேலாண்மை மற்றும் தொழில்முனைவோர் துறையின் தொழில்முனைவோர் கழகம் வணிக ஆலோசனை வழிகாட்டல் கண்காட்சி மற்றும் மினி சந்தை 2025 என்பனவற்றின் ஆரம்ப விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார்.


16 புதுமையான தொழில் யோசனைகள் மற்றும் 14 படைப்பாற்றல் மிக்க மினி சந்தை கூடாரங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்ததுடன் தொடக்க விழாவில் 200 க்கும் அதிகமான பங்கேற்பாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


இந்த கண்காட்சியினை கண்காணிப்பு செய்யும் வகையில் சிறப்பு நடுவர்கள் குழுவினர்களான பேராசிரியர் நிஷாந்தா புசிகே (கொழும்பு பல்கலைக்கழகம்), தேசிய ஒருங்கிணைப்பாளரும், பிக்டா அமைப்பின் (Puttalam ICT Association) மூத்த ஆலோசகருமான கலாநிதி இல்ஹாம் மரிக்கர், வடக்கு தொழில்துறை சபை இயக்குனரும், நேச்சர் வின்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் இணை நிறுவனருமான திருமதி பிரான்சிஸ் ஜே, முகாமைத்துவ பணிப்பாளரும், மதிப்பீட்டு பிரதிபலிப்பு குழு உறுப்பினருமான கொழும்பு பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் திரு. துலீபா லக்ஷ்மன் ஆகியோர்களும் இதில் கலந்து  கொண்டனர்.


இதன் போது உளவியலாளர் இல்ஹாம் மரைக்கார் அங்கு மேலும் உரையாற்றுகையில்,


அரச அல்லது தனியார் துறைகளில் பணியாற்றுபவர்கள் அதனுடன் மட்டும் தம்மை மட்டுப்படுத்திக் கொள்ளாமல் ஏதாவது ஒரு சுயதொழில் முயற்சியின்பால் தம்மை ஈடுபடுத்துவதானது மேலும் அவர்களுடைய பொருளாதார துறைக்கு வலுவானதாக அமையும்.


இன்றைய பொருளாதார உலகில் அதிகமானவர்கள் சுயதொழில் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர், குறிப்பாக சமையல் கலை அது போன்று கேக் உற்பத்திகள் தயாரிப்புகள் மற்றும் அழகு சாதன பொருட்களைக் கொண்டு டிசைன்களை உருவாக்குதல் போன்ற சுய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதை காண முடிகின்றது.


இவ்வாறான சந்தர்ப்பத்தில் வவுனியா பல்கலைக்கழகம் ஒரு முன்மாதிரிமிக்க தொழில் முனைவோர்களுக்கான வழிகாட்டல் கண்காட்சி ஏற்பாடு செய்து அதை சமூக மயப்படுத்துவதற்கு எடுக்கின்ற முயற்சியை நான் பாராட்டுகிறேன் என்றும் இல்ஹாம் மரைக்கார் இதன் போது குறிப்பிட்டார்.


இதனை தொடர்ந்து இரண்டு பிரிவுகளிலும் முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டதுடன் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் மக்கள் தேர்வு விருதுகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال