திறைசேரி செயலாளர் பாராளுமன்றக் குழு முன்னிலையில் முன்னிலையாக வேண்டும்: நிஸாம் காரியப்பர் வலியுறுத்து
கொழும்பு – பொதுத் திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் டொலர் சைபர் கொள்ளை மூலம் திருடப்பட்டமை தொடர்பாக, எதிர்வரும் மே 6, 2026 அன்று நடைபெறவுள்ள டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த துறைசார் மேற்பார்வைக் குழு கூட்டத்திற்கு திறைசேரி செயலாளரை அழைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் மு. நிஸாம் காரியப்பர் (PC) உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது உத்தியோகபூர்வ X (X - சமூக வலைத்தளம்) பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில், நாட்டின் நிதி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள இந்த பாரிய பாதுகாப்பு குறைபாடு குறித்து கடும் கவலை வெளியிட்டுள்ளார். இந்தச் சம்பவம் ஒரு வெளிவாரியான சைபர் தாக்குதலா அல்லது உள்வீட்டு அதிகாரிகளின் உடந்தையா என்பது கண்டறியப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். "டிஜிட்டல் பொருளாதாரத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த இவ்வாறான விடயங்களில் முழுமையான வெளிப்படைத்தன்மை அவசியம்," என நிஸாம் காரியப்பர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
(ஊடகப் பிரிவு)



No comments