நீர்கொழும்பில் 550 கிலோ பீடி இலைகளை கடற்படை பறிமுதல் செய்தது
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
நீர்கொழும்பு களப்புப் பகுதியில் இலங்கை கடற்படையால் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, புதன்கிழமை (22) சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வந்த ஐநூற்று ஐம்பது (550) கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகளை ஏற்றிச் சென்ற (01) ஒரு டிங்கி படகுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதன்படி, மேற்கு கடற்படை கட்டளையின் கீழ் இலங்கை கடற்படைக் கப்பலான கெளனியால் நீர்கொழும்பு களப்புப் பகுதியில் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, களப்புப் பகுதியில் சென்று கொண்டிருந்த ஒரு சந்தேகத்திற்கிடமான படகு பரிசோதிக்கப்பட்டது. அப்போது, பதினைந்து (15) பைகளில் கட்டப்பட்டிருந்த சுமார் ஐநூற்று ஐம்பத்து மூன்று (553) கிலோகிராம் பீடி இலைகள், இரண்டு (02) சந்தேக நபர்கள் மற்றும் அந்த படகு ஆகியவை கடற்படையால் கைப்பற்றப்பட்டன.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், சந்தேக நபர்கள் மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

No comments