சீன நன்கொடையாக வழங்கப்பட்ட பாடசாலை சீருடை பிரதமரிடம் கையளிப்பு
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
2026 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் மாணவர்களுக்கும், பிரிவேனாக்களின் மாணவ பிக்குகள், சீல மாதாக்கள் உட்பட சகல மாணவர்களுக்கும் தேவையான மொத்தச் சீருடைத் துணிகளையும், சீன மக்கள் குடியரசின் நன்கொடையாக வழங்கி முடித்தமையை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நிகழ்வு, இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சு வளாகத்தில் கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சீனத் தூதுவர் Qi Zhenhong கலந்துகொண்டார்.
இதன்போது, சீன மக்கள் குடியரசின் நன்கொடையாக 2026ஆம் ஆண்டிற்கான அனைத்துப் பாடசாலைச் சீருடைத் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்குத் தேவையான 11.484 மில்லியன் மீற்றர் பாடசாலைச் சீருடைத் துணிகள் வழங்கி முடிக்கப்பட்டதை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தும் சான்றிதழ்கள் இரு தரப்பினரிடையேயும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. இதன் மூலம் பாடசாலைச் சீருடை வசதியினைப் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 4.4. மில்லியனுக்கும் அதிகமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.







No comments