Breaking News

முன்னாள் உறுப்பினர் சுபைருக்கு கல்முனை மாநகர சபையில் அனுதாபப் பிரேரணை நிறைவேற்றம்..!

(அஸ்லம் எஸ்.மௌலானா)

முன்னாள் கல்முனை பிரதேச சபை உறுப்பினரும் அந்த சபையின் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்தவருமான மர்ஹூம் எம்.எச்.எம்.சுபைர் அவர்களுக்கான அனுதாபப் பிரேரணை கல்முனை மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.


கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை (26) பிற்பகல் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது மாநகர சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான ஏ.ஆர்.அமீர் அவர்களினால் இந்த அனுதாபப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.


இதனை கல்முனை மாநகர சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான எம்.எஸ்.எம்.உமர் அலி வழிமொழிந்து உரையாற்றினார்.


இதன்போது மர்ஹூம் சுபைர் அவர்களின் துணிச்சலான அரசியல் செயற்பாடுகள், சமூக சேவைகள், அவரது ஆற்றல், ஆளுமைகளை நினைவுகூர்ந்து இவ்விரு உறுப்பினர்களும் கருத்துரைத்தனர்.


மருதமுனையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியரான மர்ஹூம் எம்.எச்.எம்.சுபைர் அவர்கள், 1994ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்முனை பிரதேச சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டு, அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று, உறுப்பினரானதன் பேரில் அந்த சபையின் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.


இவர் அண்மையில் காலம் சென்றதையடுத்து, உறுப்பினர் ஏ.ஆர்.அமீர் அவர்களினால் இந்த அனுதாபப் பிரேரணை கொண்டு வரப்பட்டிருந்தது.






No comments