Breaking News

அஷ்ஷைக் பிச்சைத்தம்பி கஸீர் ஜவாதீ- அஸ்ஹரீ ஹதீஸ் துறையில் விசேட தரத்துடன் முதுமாணி பட்டப்படிப்பில் சாதனை

எகிப்தில் அமைந்துள்ள உலகில் பிரசித்தி பெற்ற பழமையான அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் இலங்கையைச் சேர்ந்த முதுமாணி கற்கை மாணவன் அஷ்ஷைக் பிச்சைத்தம்பி கஸீர் ஜவாதீ- அஸ்ஹரீ அவர்கள் ஹதீஸ் துறையில் முதுமாணி பட்டப்படிப்புக்காக மேற்கொண்ட ஆய்வு நூலின்  வாய்மூல பரிசீலிப்பு பரீட்சை இன்று 20/10/2021 நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.


இவ்வாய்வு நூல் 

"أسباب ورود الحديث جمعا ودراسة نقدية من الحديث رقم (1306) إلى الحديث رقم (1450) من خلال كتب السنة النبوية" 

எனும் தலைப்பை உள்ளடக்கியது மட்டுமல்லாது ஆய்வாளர் ஷைக் கஸீர் அவர்களால் சிறப்பாக ஆய்வுக்குட்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அத்தோடு மூன்று நடுவர்கள் (பரசீலிப்பாளர்கள்) கொண்ட ஒரு குழுவால் இவ்வாய்வு நூல் பரிசீலிக்கப்பட்டதையடுத்து விசேட திறமை சித்தி எனவும் இவ்வாய்வு நூலுக்கு பெறுபேறு வழங்கப்பட்டதோடு இத்தகைய தரமான ஆய்வுக்காக ஷைக் அவர்கள் கௌரவிக்கப்பட்டுமுள்ளார். அல்ஹம்துலில்லாஹ்.


இவர் இலங்கை, திருகோணமலை மாவட்டத்தில்- கிண்ணியா நகரிலுள்ள பூவரசந்தீவு தக்வாநகர் எனும் கிராமத்தில் பிச்சைத்தம்பி, பழீலா உம்மா தம்பதியினருக்கு ஏழாவது பிள்ளையாக பிறந்தார். இவருக்கு மூன்று சகோதரிகளும் ஆறு சகோதரர்களும் உள்ளனர், அத்தோடு இவர் பொருளாதார ரீதியாக நடுத்தர வர்க்க குடும்ப பின்னணியை கொண்டவராவார். 


தனது 1-11 தரம் வரையிலான பாடசாலைக் கல்வியை தி/கி/ அல்மினா மகா வித்தியாலயத்தில் கற்ற அதே வேளை  மார்க்கக் கல்வியை கற்கும் பொருட்டு கிண்ணியா-ஸஃதியா அரபுக் கல்லூரியில் சேர்ந்து 1-5 வருடங்கள் சிறப்பாக கற்றார். பின்னர் குருநாகல், ஹிப்பம்பொல ஜவாதியா அரபுக் கல்லூரியில் இணைந்து இரண்டு வருடங்கள் கற்று 2008ம் ஆண்டு ஆலிம் கற்கைநெறியைப் பூர்த்தி செய்து சிறந்த பெறுபேறுகளுடன் ஆலிமாக பட்டம் பெற்று வெளியானார். தொடர்ந்து கற்ற கல்வியில் துறைபோக கற்கும் அவாவுடன் இருக்கும் வேளையில் எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி,  2008/09/20 ம் திகதி பல்கலைக்கழக வாழ்வை ஆரம்பித்தார்.


அங்கு ஒரு வருடம் معهد இல் கற்றுவிட்டு நான்கு  வருடங்கள் قسم الحديث وعلومه பிரிவில் ஹதீஸ் துறையில் சிறப்புக் கற்கையை மேற்கொண்டு 2013ம் ஆண்டு கலைமாணி பட்டப்படிப்பை நிறைவு செய்தார், பின்னர் அதே துறையில் இவ்வருடம் (2021) முதுமாணி பட்டப்படிப்பையும் நிறைவுசெய்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். தொடர்ந்து கல்வித் தாகப் பயணத்தில் அடுத்த கட்டமாக இதே துறையில் கலாநிதி கற்கையையும் மேற்கொள்ள தீரமானித்துள்ளார். வல்ல அல்லாஹ் ஷைக் அவர்களது கல்விப் பயணத்தை மென்மேலும் இலகுபடுத்திக் கொடுப்பானாக!


இத்தனை முயற்சிகள், உயரிய அடைவுகளுக்கு அல்லாஹ்வுக்கு அடுத்ததாக இவரது துணைவியின் பங்களிப்புக்கும் பாரிய இடமுண்டு என்றால் ஒருபோதும் மிகையாகாது. இவர் ஹப்ஸா, ருகையா, உமர் என்ற மூன்று அழகிய குழந்தைகளுக்கு தந்தையுமாவார். இவர் சக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் போற்றுமளவு அனைவருடனும் பண்பாக பழகும் வண்ணம் அழகிய குணங்களை தன்னகத்தே கொண்ட பல திறமைகளுள்ள ஒரு சிறந்த ஆளுமை மட்டுமல்லாது பெரும்பாலான செயலமர்வுகளில் முன் வரிசையில் அமர்ந்து கற்கும் கல்வித் தாகம் கொண்ட மாணவர் என்பதும் மெச்சத்தக்கதாகும்.


இவரது எதிர்கால குறிக்கோள் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராகவும், மார்க்கத்தை கற்பிக்கும் மார்க்க அறிஞராகவும் இருந்து இஸ்லாத்துக்கு சேவை செய்வதாகும் என குறிப்பிடுகிறார்.


இலங்கைக்கும் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கும் பெருமை சேர்த்து தன்னை இறைக் கல்விக்காக அர்ப்பணித்துள்ள அஷ்ஷைக் பிச்சைத்தம்பி கஸீர் ஜவாதீ- அஸ்ஹரீ அவர்களை இத்தருணத்தில் போற்றி எமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கும் இதே வேளை வல்லவன் அல்லாஹ்விடம் இவரது கல்விப் பாதை மென்மேலும் சிறக்கவும், இவரது கல்விக் கடலிலிருந்து ஏனைய மக்களும் பயனடைய பிரார்த்திக்கிறோம்.


الحمد لله الذي بنعمته تتم الصالحات أولا وآخرا

 

நட்புடன்

அஸ்(z)ஹான் ஹனீபா

20/10/2021







No comments