ஹஜ் கற்றுத்தருகின்ற பாடங்களை. வாழ்வில் கடைப்பிடித்தொழுக திடசங்கற்பம் பூணுவோம்.! - கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் கே. எம். எம். பைஸர் மரிக்கார்
ஹஜ் கற்றுத்தருகின்ற பொறுமை, சகிப்புத்தன்மை, தியாகம், அர்ப்பணிப்பு போன்றவற்றை எமது வாழ்வில் கடைப்பிடித்தொழுக திடசங்கற்பம் பூணுவோம் என கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் கே. எம். எம். பைஸர் மரிக்கார் விடுத்துள்ள ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;
ஹஜ் கடமை என்பது முஸ்லிம்களிடையே எவ்வித பேதமுமில்லை என்கிற மிகப்பெரும் தத்துவத்தை உணர்த்துவதுடன் நமது தனிப்பட்ட அபிலாஷைகளை முற்றாக புறமொதுக்கி விட்டு இறைவனுக்கு அடிபணிதல் எனும் கொள்கையை மாத்திரம் கடைப்பிடிக்கின்ற இஸ்லாமியர்களாக, ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.
எமக்குள் பலமாக இருக்க வேண்டிய ஐக்கியத்தை தொலைத்து விட்டு, கருத்து முரண்பாடுகளினாலும் பிளவுகளினாலும் எமது நாட்டில் மாத்திரமல்லாமல் உலகளாவிய ரீதியில் பல்வேறு பிரச்சினைகளுக்கும் அழுத்தங்களுக்கும் முகம்கொடுத்து, அல்லலுறுகின்ற எமது சகோதரர்களின் நிம்மதியான வாழ்வுக்காக இப்புனிதத் திருநாளில் எல்லாம் வல்ல இறைவனிடம் இருகறமேந்திப் பிரார்த்திப்போம்.
மேலும், நேற்றும், இன்றும் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடுகின்ற அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும் "ஈதுல் அழ்ஹா" ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
ஈத்முபாரக்.

No comments