Breaking News

புத்தளம் ரெக்லா விளையாட்டு கழகத்தின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள்.

எம்.யூ.எம். சனூன்

புத்தளம் ரெக்லா விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த மாட்டு வண்டில் போட்டிகளின் இறுதிப்போட்டிகள் வெள்ளிக்கிழமை மாலை (25) புத்தளம் இஜ்திமா மைதானத்தில் இடம்பெற்றது.


புத்தளத்தில் பாரம்பரியமான இந்த விளையாட்டுப் போட்டிகள் நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக தொடர்ந்தும் நடாத்தப்பட்டு வருகின்றன.


மாட்டு வண்டிகளின் உரிமையாளர்கள், மாட்டுரிமையாளர்கள் மற்றும் இதர வாலிபர்களை உள்ளடக்கிய ரெக்லா என்கின்ற இந்த விளையாட்டு கழகத்தினர், ரசிகர்களுடைய எதிர்பார்ப்பை தீர்த்து வைக்கும் நோக்கத்தில் 04 மாதங்களுக்கு ஒரு முறை இவ்வாறான போட்டிகளை ஏற்பாடு செய்து நடாத்தி வருகின்றார்கள்.


கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து தெரிவு போட்டிகள் நடைபெற்று இறுதிப்போட்டிகளே  வெள்ளியன்று  நடைபெற்றன.


அரை கரத்தை, ரேஸ் கரத்தை, டயர் கரத்தை, குதிரை ஓட்டம் மற்றும் மாட்டு வண்டிகளின் திறந்த போட்டிகள் என்பன இடம்பெற்றன.


போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பெறுமதியான பரிசில்களும், வெற்றிக்கிண்ணங்களும், வழங்கி வைக்கப்பட்டன.


புத்தளம் ரெக்லா விளையாட்டு கழக தலைவர் ஏ.டபில்யூ.வாரிஸ், செயளாலர் எம்.யூ.எம்.வசீம் உள்ளிட்ட நிர்வாக குழுவினரின் விரிவான ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினரும் புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்க தலைவருமான ரணீஸ் பதூர்தீன், புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் பர்வீன் ராஜா, மணல்தீவு தொழிலதிபர் ஜிப்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


ரேஸ் கரத்தை போட்டியில் முதலாம் இடத்தை நாசிக், இரண்டாம் இடத்தை ப்ரசன்னா, மூன்றாம் இடத்தை வாரிஸ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.


அரை கரத்தை போட்டியில் முதலாம் இடத்தை இசுமி, இரண்டாம் இடத்தை இஸ்கார், மூன்றாம் இடத்தை வாரிஸ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.


ரேஸ் கரத்தை திறந்த  போட்டியில் முதலாம் இடத்தை நாசிக், இரண்டாம் இடத்தை அபான், மூன்றாம் இடத்தை  அஜித் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

 

டயர் கரத்தை போட்டியில் முதலாம் இடத்தை நாசிக், இரண்டாம் இடத்தை ராசித், மூன்றாம் இடத்தை ரியாஸ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.


நிர்வாக குழுவினர்களுக்கிடையிலான போட்டியில் முதலாம் இடத்தை ஜனார்தன், இரண்டாம் இடத்தை அமித, மூன்றாம் இடத்தை ரிஸ்வான் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.


குதிரை ஓட்ட போட்டியில் முதலாம் இடத்தை ரினாஸ், இரண்டாம் இடத்தை இஸ்கார், மூன்றாம் இடத்தை சாஹிர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.


போட்டிகளுக்கு பிரதம நடுவராக எம்.யூ.எம். வசீம், துணை நடுவராக முஹம்மது சல்மான் ஆகியோர் கடமையாற்றினர்.






















No comments