புத்தளம் இளங்கலை பட்டதாரிகள் அமைப்பின் கௌரவிப்பு விழா.
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் இளங்கலை பட்டதாரிகள் அமைப்பின் வருடாந்த கௌரவிப்பு நிகழ்வு பலரின் பங்குபற்றுதலுடன் புத்தளத்தில் மிக கோலாகலமாக நடைபெற்றது.
புத்தளம் இளங்கலை பட்டதாரிகளின் அமைப்பானது புத்தளம் கல்வி வலயத்தினுள் உயர்தர பரீட்சையில் சித்தி பெற்று அரச பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கௌரவிப்பினை வருடாந்தம் நடாத்தி வருகின்றது.
அந்த வகையில் இவ்வருடத்துக்கான கௌரவிப்பு விழா புத்தளம் இபுனு பதூதா மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (04) சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக நீர் வளங்கள் அமைச்சின் முன்னாள் செயலாளர் ஏ.சீ.எம். நபீல் கலந்து கொண்டார்.
கௌரவ அதிதிகளாக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் வீ.சிவலோகதாசன், முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார விவகாரங்களின் முன்னாள் பணிப்பாளர் எம்.ஆர்.மலிக், புத்தளம் பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.அஸ்மில், பட்டய சிவில் பொறியியலாளர் என்.கே.எம்.நன்சீர், புத்தளம் ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தின் முகாமையாளர் எம்.எப்.எம்.ரியாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
புத்தளம் இளங்கலை பட்டதாரிகளின் அமைப்பின் தலைவர் எம்.என். நப்ரான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுமார் 300க்கும் மேற்பட்ட அரச பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.
இந்த நிகழ்வில் துறை சார் நிபுணர்களைக் கொண்ட குழு கலந்துரையாடலும் இடம்பெற்றது.
புத்தளம் இளங்கலை பட்டதாரிகளின் அமைப்பின் முன்னாள் தலைவரும், தற்போதைய ஆலோசனைக் குழு உறுப்பினரும், ஊக்குவிப்பு பேச்சாளருமான எம்.ஆர்.எம். ஷவ்வாப் மாணவர்களுக்கான ஊக்குவிப்பு உரையை நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து புத்தளம் இளங்கலை பட்டதாரிகள் அமைப்பின் பிரதித் தலைவர் ஆர். ரோஷனின் நன்றி உரையுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றது. இந்த கௌரவிப்பு
நிகழ்வானது எதிர்வரும் காலங்களில் உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களை தொடராக ஊக்கப்படுத்தும் நிகழ்வாக இது அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.







No comments