Breaking News

புத்தளம் லிவர்பூல் அணிக்கும், ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி.அணிக்கும் இடையில் நடைபெற்ற கண்காட்சி உதைப்பந்தாட்ட போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி. அணி வெற்றி.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் லிவர்பூல் அணிக்கும், ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி.அணிக்கும் இடையில் நடைபெற்ற கண்காட்சி உதைப்பந்தாட்ட போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி. அணி 02 :00 என்ற கோல்களினால் வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்து கொண்டது.


புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின், 80 வருட கனவான, பஸ் ஒன்றினை பெற்றுக் கொள்வதற்காக "Bus For My Zahira" க்கான நிதி திரட்டும் திட்டத்துக்காக இந்த கண்காட்சி உதைப்பந்தாட்ட போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இந்த போட்டியானது புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை (05) மாலை 4 மணிக்கு இடம்பெற்றது.


இடைவேளைக்கு முன்பாக இரண்டு அணிகளும் கோல்களை பெற பலத்த முயற்சிகளை மேற்கொண்டபோதும் முடியாமல் போனது.


எனினும் இடைவேளைக்கு பின்பு தனது அணியினை மேலும் பலப்படுத்திய ஏறாவூர் அணி அதிரடியாக தொடர்ந்து இரண்டு கோல்களை பெற்றுக்கொண்டது.


அவ் அணியின் முன்கள வீரர் முஹம்மது முஸ்தாக் தனது அணிக்கான 02 கோல்களையும் பெற்றுக்கொடுத்தார்.


ஏறாவூர் அணியினை அதன் பயிற்றுவிப்பாளர் அதிபர் மொஹிதீன் வழி நடாத்தி இருந்தார்.


லிவர்பூல் அணியினை அதன் பயிற்றுவிப்பாளர் எச்.எம்.ஹம்ருசைன் வழி நடாத்தி இருந்தார்.


இந்த கண்காட்சி போட்டியினை புத்தளம் காற்பந்தாட்ட லீக், புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை நிர்வாகம், பழைய மாணவர் சங்கத்தினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.


போட்டிக்கு நடுவர்களாக எம்.எஸ்.எம். ஜிப்ரி, எம்.ஆர்.எம்.அம்ஜத், ஏ.ஏ.கியாஸ், எம்.எம்.சபான் ஆகியோர் கடமையாற்றினர்.


இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் மாநகர சபை மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத் கலந்து கொண்டார். மாநகர சபை உறுப்பினர்களான எம். டி.எம்.சஹ்ரான், இப்லால் அமீன், புத்தளம் காற்பந்தாட்ட லீக் நிர்வாகிகள், சாஹிரா தேசிய பாடசாலையின் அதிபர் ஐ.ஏ.நஜீம், Bus For My Zahira இணைப்பாளர் கவிஞர் "புத்தளம் மரைக்கார்", பழைய மாணவர் சங்கத்தினர், அணுசரனையாளர்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.


குறிப்பு:

நீல நிற மேலங்கி ஏறாவூர் அணி.

சிவப்பு நிற மேலங்கி புத்தளம் அணி.











No comments