Breaking News

சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலில் சுதந்திர தினம் அனுஷ்டிப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 77 ஆவது சுதந்திர தினம் இன்று (04) செவ்வாய்க்கிழமை சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் கொண்டாடப்பட்டது.


சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் பொறுப்பாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் மரைக்காயர்மார்கள் புடைசூழ தேசிய கொடி ஏற்றப்பட்டது.


சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலினால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சுதந்திர தினத்தையொட்டி பள்ளிவாசல் வளாகத்தில்  

மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றது.


சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் பிரதித்தலைவர் எம்.எம்.எம். இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற

இந்நிகழ்வில், அரசியலமைப்புப் பேரவை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் அபிவிருத்தி குழுத் தலைவரும் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.


இந்நிகழ்வில்,  சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி வை.எல்.ஏ. ரகூப், பொலிஸ் பரிசோதகர் யூ.எல்.எம்.முபாரக், ஜும்ஆப் பள்ளிவாசலின்  செயலாளர் எம்.எம் எம். றபீக், பொருளாளர் ஏ.ஏ.சலீம் உட்பட, பொறுப்பாளர் சபை உறுப்பினர்கள், கௌரவ மரைக்காயர்மார்கள் உட்பட அதன் நிர்வாக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு மரங்களை நட்டு வைத்தனர்.


இதன்போது சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் பேஸ் இமாம் எம்.ஐ. ஆதம்பாவா ரஷாதியினால் துஆப் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.








No comments

note