Breaking News

மகிழ்ச்சி, சகிப்புத்தன்மை, ஒற்றுமை ஓங்க அனைவரும் இத்திருநாளில் உறுதியேற்போம் சிங்கப்பூர் முஸ்லிம் லீக் தலைவர் மு. ஜஹாங்கீர்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

மனிதர்களை மனிதர்களே கொல்லும் நரபலியை தடுத்து, ஆடு, மாடு, ஒட்டகங்கள் என பல்கிப் பெருகும் கால்நடைகளை இறைவனுக்காக அறுத்துப் பலியிட்டு, அதன் கறியை ஏழைகளுக்கு விநியோகிக்கும் முறையை, தொடக்கி வைத்தவர், இறை தூதர்களில் ஒருவரான நபி இப்ராஹீம் (அலை) அவர்களாவார்கள் என சிங்கப்பூர் முஸ்லிம் லீக் சமூக, நல்லிணக்க, சேவை அமைப்பின் தலைவரும் புதிய நிலா பிரதம ஆசிரியருமான மு. ஜஹாங்கீர் தெரிவித்துள்ளார்.


சிங்கப்பூரில் இருந்து இலங்கை வாழ் முஸ்லிம் மக்களுக்காக வெளியிட்டுள்ள ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துச் செய்தியிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


தனது தவப்புதல்வர் இஸ்மாயில் (அலை) அவர்களை ; தான் கண்ட கனவின் படி ; இறைவனுக்காக அறுத்துப் பலியிட அவர் துணிந்த போது;இறைவனிடமிருந்து வந்த  கட்டளை அதை தடுத்து நிறுத்தியது. அவரது இறைப்பற்றை  சிலாகித்து ; அதற்கு பகரமாக ஓர் ஆட்டை பலியிடுமாறு அந்த இறை கட்டளை அறிவுறுத்தியது.


அந்த நிகழ்வே தியாகத்திருநாளாக உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.


இத்திருநாளில் ஒரு மாபெரும்  சமூக நல்லிணக்கமும் அடங்கியிருக்கிறது. அதாவது, இறைத்தூதர் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள் என மூன்று பெரும் சமூகங்களால் போற்றப்படுபவர்.


அவர் மூலம் நிகழப்பெற்ற ஒரு வரலாற்று சம்பவத்தை, இறைவனின் இறுதித்தூதராம் நபி (ஸல்) அவர்கள் தியாகத் திருநாளாக கொண்டாட அறிவுறுத்தி இருக்கிறார்கள். அதன்படியே உலகமெங்கும் வாழும் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் இத்திருநாளைக் கொண்டாடுகிறார்கள்.


கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு இத்திருநாள் கோலாகலமாக கொண்டாட முடியாத நிலையில், இவ்வாண்டு கட்டுப்பாடுகளுடன் கொண்டாடும் வாய்ப்பு உலகின் பல பகுதிகளில் வாழும் மக்களுக்கு கிடைத்திருக்கிறது. தியாகங்கள் தான் வாழ்க்கையை அர்த்தப்படுத்துகின்றன.


கொரோனா காலகட்டத்தில் தியாகபூர்வமாக பணியாற்றும் அனைத்து முன் கள பணியாளர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து, மகிழ்ச்சி, சகிப்புத்தன்மை, ஒற்றுமை ஓங்க அனைவரும் இத்திருநாளில் உறுதியேற்போம் என கேட்டுக்கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.




No comments