உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு நேற்று வெள்ளிக்கிழமை உள்ளுராட்சி மன்றங்களுக்கு இடையிலான லீக் முறையிலான மின்னொளி கிரிக்கெட் போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் அக்கரைப்பற்று மாநகர சபை, கல்முனை மாநகர சபை, அக்கரைப்பற்று பிரதேச சபை மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபை ஆகிய அணிகள் பங்குபற்றியிருந்தன.
இத்தொடரிலே இறுதிப் போட்டிக்கு அக்கரைப்பற்று மாநகர சபை அணியும், கல்முனை மாநகர சபை அணியும் தெரிவு செய்யப்பட்ட நிலையில் விறுவிறுப்பாக இடம்பெற்ற இறுதிப் போட்டியில் அக்கரைப்பற்று மாநகர சபை அணி வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்து கொண்டதுடன் கல்முனை மாநகர சபை அணி இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்பட்டதுடன், ஒவ்வொரு போட்டிக்கான ஆட்ட நாயகன் விருதுகளும், தொடராட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டன.
இறுதிப் போட்டியில் தொடராட்ட நாயகனாக கல்முனை மாநகர சபை அணியைச் சேர்ந்த நுபைஸ் தெரிவு செய்யப்பட்டு கிண்ணத்தை பெற்றுக் கொண்டதுடன், இறுதிப் போட்டியில் அக்கரைப்பற்று மாநகர சபை அணியை சேர்ந்த என்.எம். நௌபீஸ் அவர்கள் 17 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 1 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 40 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்து ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
என்.எம். நௌபீஸ் அவர்கள், அக்கரைப்பற்று மாநகர சபையின் ஆணையாளரும் கல்முனை மாநகர சபையின் பதில் ஆணையாளரும் என்பது குறிப்பிடத்தக்கது.





