(அஷ்ரப் ஏ. சமத்)
கொழும்பைச் சேர்ந்த 'ஊதாப்பூ' ஏ.ஆர்.எப். சிமாரா அலி அவர்களின் இரண்டாவது நூலான 'இளஞ்சிறகுகள்' சிறுவர் கதைகள் நூல் வெளியீட்டு விழா நேற்று சனிக்கிழமை (15.08.2026) கொழும்பு தபாலகக் கேட்போர் கூடத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழா சிரேஷ்ட ஊடகவியலாளர் அஷ்ரப் சிஹாப்தீன் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவிற்குப் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அவர்களும், கௌரவ அதிதிகளாகப் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், பிரதமர் அலுவலகத்தின் மேலதிகச் செயலாளர் ஏ.எல்.எம். அஷ்ரப் ஆகியோரும் கலந்துகொண்டனர். நூலின் முதற்பிரதியைச் சுங்க அத்தியாட்சகர் உவைஸ் மொஹிதீன் பெற்றுக்கொண்டார். மேலும் இலக்கியவாதிகள், மகளிர் அமைப்புகளின் தலைவிகள், ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
அத்துடன், அகில இலங்கை ரீதியில் சிறுவர்களுக்கிடையே நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் வெற்றிபெற்ற 25 மாணவ மாணவிகளுக்குப் பரிசுப் பொருட்களும், சான்றிதழ்களும், பணப்பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
தலைமையுரையை அஷ்ரப் சிஹாப்தீனும், நூல் நயவுரையை நாச்சியாதீவு பர்வீன் மற்றும் டி.எஸ். சேனானாயக்க கல்லூரியின் ஆசிரியை சஹீகா பௌமி ஆகியோரும் நிகழ்த்தினர். ஏற்புரையை நூலாசிரியர் 'ஊதாப்பூ' சிமாரா நிகழ்த்தினார்.









