எம்.யூ.எம்.சனூன்
நாட்டில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள டெங்குதனை ஒழித்து கட்டும் தோரனையில் புத்தளம் பாலாவி மல்லிகா புரத்தில் மகளிர் அணியினர் களத்தில் குதித்துள்ளனர்.
இந்த துரிதமான டெங்கு ஒழிப்பு சிரமதான பணிகள் புதன்கிழமை (22) காலை புத்தளம் பாலாவி மல்லிகாபுரம் கிராமத்தில் இடம்பெற்றது.
மகளிர்களுக்கான கல்வி மேம்பாடு, சுகாதாரம், சிறுவர் பாதுகாப்பு உள்ளிட்ட மகளிர்களுக்கான உரிமைக்காக சுமார் 19 வருட காலமாக போராடி வரும் பாலாவி ஸ்டார் மாதர் சங்கத்தினால் இந்த துரிதமான டெங்கு ஒழிப்பு சிரமதான பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதன் ஆரம்ப நிகழ்வில் புத்தளம் பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் கலந்து கொண்டு உற்சாகத்தை வழங்கினார்.
ஸ்டார் மாதர் சங்கத்தின் தலைமையின் கீழ் நடைபெற்ற இந்த சிரமதான பணியில் சுமார் 55 அங்கத்தவர்கள் கலந்து கொண்டு சிரமதான பணியில் பங்கேற்றனர்.
19 வருடங்களாக சமூக சேவையாற்றி வரும் ஸ்டார் மாதர் சங்கமானது பாலாவி பரீதாபாத், மதீனா புரம், செம்மடு, மல்லிகாபுரம் ஆகிய நான்கு கிராமங்களை சேர்ந்த மகளிர்களினால் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட மாதர் சங்கமாகும்.
குறித்த இந்த சிரமமான பணியில் பிரதேசத்தில் காணப்பட்ட டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் இனங்காணப்பட்டு இந்த சிரமதானம் மூலம் அழித்தொழிக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.







