நூருல் ஹுதா உமர்
கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக கடமைநிறைவேற்று அதிபர்களாக பணியாற்றி வரும் கல்வியாளர்களுக்கு இழைக்கப்பட்டுவரும் அநீதிகளுக்கு எதிராகவும், அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வலியுறுத்தியும் இன்று (20) காலை 10.00 மணியளவில் திருகோணமலை கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக அமைதியான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநரை ஆளுநர் செயலகத்தில் இன்று (20) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய கிழக்கு மாகாண கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்க பிரதிநிதிகள், அப்பேச்சுவார்த்தை வெற்றியளிக்காதமையை அடுத்தே ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக அமைதியான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாகாணத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த கடமைநிறைவேற்று அதிபர்கள் கலந்துகொண்டு, பல ஆண்டுகளாக அதிபர் பொறுப்பில் பணியாற்றிய போதிலும் இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படாதமை தமக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியாகும் எனக் குறிப்பிட்டனர்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்கள், நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தம், 2004 சுனாமி, வெள்ளப் பேரழிவுகள், பொருளாதார நெருக்கடி மற்றும் கொவிட்-19 தொற்றுக் காலம் உள்ளிட்ட பல்வேறு சவாலான சூழ்நிலைகளில் கூட பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை இடையறாது முன்னெடுத்து, மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் பாதுகாப்பதில் கடமைநிறைவேற்று அதிபர்கள் முக்கிய பங்காற்றியதாக தெரிவித்தனர்.
பல ஆண்டுகளுக்கு மேலாக அதிபர் பொறுப்பில் பணியாற்றிவரும் பலர் இன்றளவும் நிரந்தர நியமனம் இன்றி சேவையாற்றி வருகின்றனர். பல பாடசாலைகளில் அதிபர் தர அதிகாரிகள் பொறுப்பேற்காத காலகட்டங்களில், மாணவர்களின் நலனையும் கல்வியின் தொடர்ச்சியையும் உறுதிப்படுத்தும் வகையில் இக்கல்வியாளர்கள் தன்னலமின்றி பணியாற்றியதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
மேலும், நீண்டகாலமாக அதிபர் பொறுப்பில் செயல்பட்டவர்களை திடீரென ஆசிரியர் பணிக்குத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் தொழில்முறை கௌரவத்தையும் மனநிலையையும் கடுமையாக பாதிப்பதோடு, பல ஆண்டுகளாக நிர்வாக அனுபவம் பெற்ற கல்வியாளர்களுக்கு பெரும் அநீதியை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் கீழ் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவோருக்கு நிரந்தர நியமனம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதால், அதில் நீண்டகாலமாக சேவையாற்றிவரும் கடமைநிறைவேற்று அதிபர்களையும் உள்ளடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அத்துடன், நாட்டின் ஏனைய மாகாணங்களில் நடைமுறையில் இல்லாத வகையில் கிழக்கு மாகாணத்தில் மட்டும் கடமைநிறைவேற்று அதிபர்களுக்கு எதிராக அநீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
இதனையடுத்து பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
* நீண்டகாலமாக சேவையாற்றும் கடமைநிறைவேற்று அதிபர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குதல்.
* வயது எல்லையை கடந்த முன்னாள் கடமைநிறைவேற்று அதிபர்களுக்கும் சம வாய்ப்பு வழங்குதல்.
* அதிபர் சேவைக்குரிய சம்பளம், பதவி உயர்வு மற்றும் ஓய்வூதிய நலன்களை வழங்குதல்.
* திடீர் இடமாற்றங்கள் மற்றும் ஆசிரியர் பணிக்கு மீள அனுப்பும் நடவடிக்கைகளை நிறுத்தி மனிதநேயமான தீர்வுகளை வழங்குதல்.
* கல்வி அமைச்சு, மாகாண கல்வித் திணைக்களங்கள் மற்றும் பொது சேவை ஆணைக்குழு இணைந்து நிலையான கொள்கையொன்றை உருவாக்குதல்.
மேலும், நீண்டகால நிர்வாக அனுபவம் கொண்ட கடமைநிறைவேற்று அதிபர்களை மீண்டும் ஆசிரியர் சேவைக்கு அனுப்புவதற்குப் பதிலாக, வலயக் கல்வி அலுவலகங்களில் நிர்வாகம், திட்டமிடல், கண்காணிப்பு, கல்வி அபிவிருத்தி மற்றும் ஒருங்கிணைப்பு போன்ற பொறுப்புகளில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
இலங்கையின் கல்வி அமைப்பை பல்வேறு நெருக்கடி காலங்களிலும் தாங்கி நிறுத்திய கடமைநிறைவேற்று அதிபர்களுக்கு உரிய அங்கீகாரமும் நீதியும் வழங்கப்படுவது காலத்தின் அவசியமாகும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.
மேலும், "எமது சேவைக்கு நீதி வேண்டும்; காலதாமதம் வேண்டாம்!", "கடமை செய்தோம்; உரிமையையும் வழங்குங்கள்!", "உழைப்புக்கு மதிப்பு வேண்டும்; வாக்குறுதி அல்ல, தீர்வு வேண்டும்!", "நிர்வாகம் இயங்க எம்மை மதியுங்கள்!", "எமது குரலைக் கேளுங்கள்; நீதியை வழங்குங்கள்!", "சேவையை மதிக்கும் அரசு – மக்களை மதிக்கும் அரசு!", "கடமையில் உறுதி; உரிமையில் சமரசமில்லை!", "நீதி தாமதமானால் அது அநீதியே!", "எமது அர்ப்பணிப்புக்கு உரிய அங்கீகாரம் வேண்டும்!", "சேவையை தொடர்கிறோம்; நீதியை எதிர்பார்க்கிறோம்!", "வாக்குறுதி போதாது; நடைமுறை தீர்வு வேண்டும்!", "எமது உழைப்பை மதியுங்கள்; எமது உரிமையை வழங்குங்கள்!", "அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பு நாமே!", "சம உரிமை – சம அங்கீகாரம் – சம நீதி!", "இன்று எமக்கான நீதி; நாளை சிறந்த அரசுச் சேவை!", "கடமையை நிறைவேற்றினோம்; கடமையை அரசு நிறைவேற்றட்டும்!", "எங்கள் பொறுமையை பலவீனமாக நினைக்க வேண்டாம்!", "அரசியல் வேண்டாம்; நிர்வாக நீதி வேண்டும்!", "எமது கோரிக்கை சலுகையல்ல; நியாயமான உரிமை!", "நீதியே எமது பலம்; ஒற்றுமையே எமது குரல்!" போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகள் மற்றும் சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
மகஜரை ஆளுநர் கையேற்க மறுத்துள்ள இந்நிலையில் நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை இப்போராட்டம் சுழற்சி முறையில் நடைபெறவுள்ளதாக போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.









