(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
மலையக மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சினால் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு பங்களிப்பு வழங்கக்கூடிய காத்திரமான முன்மொழிவுகள், ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களைப் பெற்றுக்கொள்வதற்கான விசேட கலந்துரையாடல் புதன்கிழமை (05.08.2026) பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சின் கேட்போர் கூடத்தில், பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையிலும் ஏற்பாட்டிலும் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில், மலையக மக்களின் காணி, வீடமைப்பு மற்றும் அடிப்படை உரிமைகள் தொடர்பாக நீண்டகாலமாக செயற்பட்டு வரும் பல்வேறு சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் நிபுணர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களையும் பரிந்துரைகளையும் முன்வைத்தனர்.
இந்நிகழ்வில் பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் (VOPP) நிறைவேற்று இயக்குநர் அன்டனி ஜேசுதாஸன், பங்கேற்று முக்கியமான கருத்துக்களை முன்வைத்தார். குறிப்பாக, மாத்தறை, காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் வாழும் மலையக மக்களுக்கு 1993 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட காணிகளுக்கு இதுவரை உரிமை உறுதிப்பத்திரங்களோ, சட்டபூர்வமான காணி ஆவணங்களோ வழங்கப்படாதிருப்பது மிகவும் பாரிய பிரச்சினையாக இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், காணிகளைப் பயன்படுத்தி பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்தாலும், உரிமை ஆவணங்கள் இல்லாத காரணத்தால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதுகாப்பற்ற நிலையில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் வீடமைப்பு, வங்கி கடன் வசதிகள், அரசாங்க அபிவிருத்தித் திட்டங்களில் பங்கேற்பு உள்ளிட்ட பல அடிப்படை உரிமைகளையும் அவர்கள் இழந்து வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
அதேவேளை பிரதி அமைச்சர் மற்றும் அவரது அதிகாரிகள் தொடர்ச்சியாக சிவில் அமைப்புகளை அழைத்து ஆலோசனைகளைப் பெறுவது பாராட்டப்பட வேண்டிய விடயம் என்றும் சுட்டிக்காட்டினார்.
இக் கலந்துரையாடலில் பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் திரு. சிவநேசன், இணைப்புச் செயலாளர் திரு. வசந்த், மக்கள் தொடர்பாடல் உத்தியோகத்தர் திருமதி புவனேஸ்வரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.




