எம்.யூ.எம்.சனூன்
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் புத்தளம் தள வைத்தியசாலைக்கு புதன்கிழமை (29) விசேட விஜயமொன்றை மேற்கொண்டு, வைத்தியசாலையில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளைப் பார்வையிட்டார்.
இதன்போது, இலங்கை விமானப்படையின் உதவியுடன் ஆறாம் வார்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகளை அவர் விசேடமாக மேற்பார்வையிட்டார்.
மேலும், வைத்தியசாலையின் குழந்தைகள் வார்டின் கூரையை முழுமையாகப் புனரமைப்பதற்கான உதவிகளை வழங்கும் நோக்கில், நன்கொடையாளர் ஒருவரையும் அவர் அழைத்து வந்திருந்தார்.
வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களுக்குத் தேவையான உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் தொடர்ந்து வழங்குவதாகவும் அவர் உறுதியளித்தார்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் மனைவி தனது ஆரம்ப மருத்துவப் பயிற்சியை இதே வைத்தியசாலையில் பெற்றிருந்தமை, இந்த விஜயத்தின் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இவ்விஜயத்தின்போது, புத்தளம் மாநகர முதல்வர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மட், புத்தளம் தள வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகர், விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை வரவேற்றனர்.
விஜயத்தை நினைவுகூரும் வகையில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு நினைவுச் சின்னமொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.






