Breaking News

புத்தளம், கரைத்தீவு முந்திரி தோட்டத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

புத்தளம் கரைத்தீவில் முந்திரி தோட்டத்தில் இடம் பெற்ற வாயு துப்பாக்கி (Air Rifle) சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் இதனுடன் தொடர்புபட்ட எட்டு பேரை கைது செய்துள்ளதாக வணாத்தவில்லு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (09) அதிகாலை வணாத்தவில்லு பொலிஸ் பிரிவின் கரைத்தீவு பகுதியில் இடம்பெற்றுள்ளது.


சம்பவத்தில் உயிரிழந்தவர் 38 வயதுடைய அத்துக்கோரளகே பிரதீப் சுசந்த என அடையாளம் காணப்பட்டுள்ளார் 


தகவலின்படி சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான கரைத்தீவு பகுதியில் அமைந்துள்ள சுமார் 50 ஏக்கர் பரப்பளவுடைய முந்திரி தோட்டம், கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவரால் முந்திரி அறுவடை செய்வதற்காக குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.


அந்த முந்திரி தோட்டத்தை பாதுகாக்க குத்தகையாளர் தனிப்பட்ட பாதுகாப்பு காவலர்களை நியமித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (09) அதிகாலை குறித்த முந்திரி தோட்டத்திற்குள் இரகசியமாக நுழைந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் காவலில் இருந்த பாதுகாப்பு பணியாளர் ஒருவர் வாயு துப்பாக்கி மூலம் சுட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


கடுமையாக காயமடைந்த குறித்த நபர் உடனடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக இதுவரை எட்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவம் குறித்த நீதிமன்ற விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் வணாத்தவில்லு  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




No comments