நுரைச்சோலை ஆலங்குடா கடற்கரையில் சட்டவிரோதமாக கொண்டுவர முற்பட்ட பீடி இலைகள் மற்றும் மருந்துப் பொருட்களை கைப்பற்றிய கடற்படை
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
இலங்கை கடற்படையால் நுரைச்சோலை ஆலங்குடா கரையோர பகுதியில் வியாழக்கிழமை (11) மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயற்சிக்கப்பட்ட பீடி இலை மற்றும் மருந்துப் பொருட்களுடன் கூடிய ஒரு டிங்கி படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
வடமேற்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட இலங்கை கடற்படையின் விஜய நிறுவனத்தினால், நுரைச்சோலை ஆலங்குடா கரையோரப் பகுதியை அண்மித்த கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சோதனை நடவடிக்கையின் போது மிதந்துகொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான ஒரு டிங்கி படகு சோதனைக்குட்படுத்தப்பட்டது. இதன்போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயற்சிக்கப்பட்ட 177 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகள், சுமார் 354,000 மருந்து மாத்திரைகள், மருந்துக் களிம்புகள் அடங்கிய 7,673 பொதிகள், மருந்துப் பொருட்கள் அடங்கிய 118 போத்தல்கள் மற்றும் ஒரு டிங்கி படகு ஆகியவை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
பீடி இலைகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் அடங்கிய இந்த சரக்கை கடத்தல்காரர்கள் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்த நிலையில், கடற்படையின் நடவடிக்கைகள் காரணமாக அதனை கைவிட்டு தப்பியோடியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், மருந்துப் பொருட்களின் தொகை மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.





No comments