சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு கழிவுப்பொருட்களால் செய்யப்பட்ட ஆக்கங்களின் கண்காட்சி.
எம்.யூ.எம்.சனூன்
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கொண்டாடப்பட்ட சுற்றாடல் வார நிகழ்வுகளின் ஒரு முக்கிய செயல் திட்டமாக, வடமேல் மாகாணம், புத்தளம் மாவட்டம், பழைய நகர் மாதம்பையில் அமைந்துள்ள அல்மிஸ்பா மகா வித்தியாலயத்தின் தரம் இரண்டு மாணவர்களின் கழிவுப்பொருட்களால் செய்யப்பட்ட ஆக்கங்களின் கண்காட்சி நிகழ்வு வியாழக்கிழமை (11) பாடசாலையில் சிறப்பாக நடைபெற்றது.
அரசாங்கத்தின் சுற்று நிருபத்திற்கு அமைவாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பயன்பாட்டிற்குப் பின் தூக்கி எறியப்படும் பொருட்களை மீள பயன்படுத்துவதன் அவசியம், சுற்றாடல் பாதுகாப்பின் முக்கியத்துவம் மற்றும் மாணவர்களிடையே ஆக்கத்திறனை வளர்த்தல் ஆகிய நோக்கங்களுடன் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாணவர்கள் தமது கற்பனைத்திறன் மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு பயனுள்ள மற்றும் கவர்ச்சிகரமான ஆக்கங்களை உருவாக்கி காட்சிப்படுத்தினர்.
பாடசாலை அதிபர் எஸ்.எல். அன்வரின் வழிகாட்டலிலும், ஆரம்பப் பிரிவு உதவி அதிபர் ஜே.எஸ்.எப்.ரினோசாவின் மேற்பார்வையிலும், ஆரம்பப் பிரிவு பகுதி தலைவர் எம்.பி.பஸ்லியா பானுவின் ஒருங்கிணைப்பிலும் இந்நிகழ்வு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
மேலும், தரம் இரண்டு வகுப்பு ஆசிரியர்களான எம்.எஸ்.என்.எப்.ஷர்மிளா மற்றும் எம்.என்.எம். நஸ்மா ஆகியோரின் அர்ப்பணிப்பான பங்களிப்புடன், மாணவர்களும், பெற்றோர்களும் இணைந்து இந்நிகழ்வை சிறப்பாகச் செய்து முடித்தனர்.
சுற்றாடலைப் பாதுகாக்கும் பொறுப்புணர்வையும், கழிவுப்பொருட்களின் மீள் பயன்பாட்டின் முக்கியத்துவத்தையும் மாணவர்களிடையே வளர்க்கும் பயனுள்ள முயற்சியாக இக்கண்காட்சி அமைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.






No comments