Breaking News

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மனக்கணிதப் போட்டியில் மாத்தளை மாணவனுக்கு இரண்டாம் இடம் : 12 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இலங்கைக்கு பெருமை சேர்த்த சாதனை

நூருல் ஹுதா உமர்

மலேசியாவின் ஜென்டிங் (Genting) நகரில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச மனக்கணித (Abacus & Mental Arithmetic) போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற மாத்தளை மாணவன் எஸ். லபிஷாசன் இரு போட்டி நிகழ்வுகளிலும் இரண்டாம் இடத்தைப் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.


12 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற இச்சர்வதேசப் போட்டியில், மாத்தளையில் இயங்கி வரும் Icam abacus (ஐகாம் மனக்கணிதக் கல்வி நிலையத்தின்) பயிற்சித் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற எஸ். லபிஷாசன் தனது அபார திறமையை வெளிப்படுத்தி இந்த சிறப்பான வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.


மாத்தளை, திருகோணமலை வீதி, மண்டந்தாவெல பகுதியைச் சேர்ந்த சுகந்தன் – சசிரேகா தம்பதியினரின் புதல்வரான இவர், தற்போது ஹார்வர்ட் சர்வதேச பாடசாலையின் நான்காம் தரத்தில் கல்வி கற்று வருகின்றார். குறுகிய காலப் பயிற்சியிலேயே சர்வதேச மட்டத்தில் தனது மனக்கணிதத் திறனையும் கணித ஆற்றலையும் நிரூபித்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.


இம்மாணவனின் வெற்றி இலங்கைக்கும், குறிப்பாக மத்திய மாகாணத்திற்கும், மாத்தளை மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்கும் வரலாற்றுச் சாதனையாகக் கருதப்படுகிறது. சர்வதேச அரங்கில் இலங்கை மாணவர்களின் அறிவாற்றல், திறமை மற்றும் போட்டித்தன்மையை வெளிப்படுத்தியுள்ள இவ்வெற்றி, நாட்டின் இளம் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாகவும் அமைந்துள்ளது.


மேலும், மாத்தளை Icam abacus (மனக்கணிதக் கல்வி நிலையத்தின்) மாணவர்கள் கடந்த பல ஆண்டுகளாக தேசிய மற்றும் சர்வதேச மட்டப் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் சிந்தனைத் திறன், கணித ஆற்றல் மற்றும் அறிவாற்றல் வளர்ச்சிக்காக இந்நிறுவனம் ஆற்றி வரும் சேவைகள் கல்வித் துறையில் பரவலாகப் பாராட்டப்பட்டு வருகின்றன.


சர்வதேச மட்டத்தில் சாதனை படைத்த மாணவன் எஸ். லபிஷாசனுக்கு கல்வியாளர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தமது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.






No comments