Breaking News

கம்மன்பிலவின் நூல் வெளியீட்டில் கட்சித் தலைவர் பங்கேற்பு: இம்ரான் மகரூப் எம்.பி கடும் அதிருப்தி

நூருல் ஹுதா உமர்

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வெளியிட்ட சர்ச்சைக்குரிய நூல் வெளியீட்டு விழாவில், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டமை தொடர்பில் கடும் அதிருப்தி மற்றும் அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில், குறித்த நிகழ்வில் கட்சித் தலைவர் பங்கேற்றமை தமக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.


மேலும், உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலால் நேரடியாக பாதிக்கப்பட்ட சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதியாக, தமது ஆதரவாளர்களும் பொதுமக்களும் இச்செயலை ஏற்றுக்கொள்ள முடியாத நிலைப்பாட்டில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட வேண்டும் என்ற ஒரே நிலைப்பாட்டிலேயே ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிக்கும் அனைத்து இன, மத மக்களும் உள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


இத்தகைய பின்னணியில், அரசியல் உள்நோக்கத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் உதய கம்மன்பிலவின் நூல் வெளியீட்டு விழாவில் கட்சித் தலைவர் பங்கேற்றதை தாம் ஒருபோதும் நியாயப்படுத்தவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ முடியாது என இம்ரான் மகரூப் எம்.பி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.




No comments