Breaking News

இணைய மோசடி: சீனர்கள் உட்பட 150 வெளிநாட்டவர்கள் சிலாபத்தில் கைது

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

சிலாபம், அம்பக்கந்தவில - இரணவில பகுதியில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றைக் வாடகைக்கு எடுத்து, அங்கிருந்து இணையத்தளம் ஊடாக நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் சீனர்கள் உள்ளிட்ட 150 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கணினி குற்றப்பிரிவு அதிகாரிகள் இந்த அதிரடிச் சோதனையை மேற்கொண்டு அவர்களைக் கைது செய்துள்ளனர்.


கைது செய்யப்பட்டவர்களின் விவரம்:


கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சீன நாட்டவர்கள் என்பதுடன், மொத்தமாக 150 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு:

சீன நாட்டவர்கள்: 133 பேர் (126 ஆண்கள் மற்றும் 7 பெண்கள்).

வியட்நாம் நாட்டவர்கள்: 13 பேர் (10 ஆண்கள் மற்றும் 3 பெண்கள்).

மலேசிய நாட்டவர்: ஒருவர்.


குறித்த வெளிநாட்டினர் குழுவினர், சிலாபம் கடற்கரையோரப் பகுதியில் அமைந்துள்ள இந்தச் சொகுசு ஹோட்டலில் தங்கியிருந்து மர்மமான முறையில் சில செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.


இதனைத் தொடர்ந்து, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது, இவர்கள் இணையத்தளம் வாயிலாகப் பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்தது கண்டறியப்பட்டது.


கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஏராளமான மடிக்கணினிகள் (Laptops), கைபேசிகள் மற்றும் இணையக் கருவிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப்பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





No comments