ஏறாவூர் அபிவிருத்தி: அனைத்து தலைமைகளும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும் - முகா தலைவர் ஹக்கீம் வேண்டுகோள்
ஏறாவூரில் அரைகுறையாக நிற்கும் திட்டங்களை ஒழுங்காகவும்,சிறப்பாகவும் செய்து முடிப்பதற்கு இப்பிரதேசத்தின் அனைத்து தலைமைகளும் ஒன்றுபட்டுச் செயலாற்ற முன்வர வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்தார்.
ஏறாவூர் நகர சபையின் ஏற்பாட்டில் ,அதன் தவிசாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். நழீம் தலைமையில் அண்மையில் புன்னக்குடா வீதியில் நடைபெற்ற ஏறாவூர் பொதுச்சந்தையின் மாபெரும் திறப்பு விழாவில் விசேட அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்ண சேகர பிரதம அதிதியாகவும் , மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் உட்பட இன்னும் முக்கிய பிரமுகர்கள் சிறப்பு அதிதி களாகவும்,இன்னும் மத்திய அரசு மற்றும் மாகாண சபை உயர் அதிகாரிகள் ஏறாவூர் நகர சபை உறுப்பினர்கள் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அங்கு உரையாற்றுகையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மேலும் தெரிவித்தாவது,
ஆங்கிலேயர் காலத்தில் ஒரு ‘சனிட்டரி போர்ட்’ ஆக ஆரம்பிக்கப்பட்ட ஏறாவூர் நகரசபை, இப்பொழுது முழுமையான நகரசபையாக வளர்ச்சியடைந்திருக்கிறது. இந்த வளர்ச்சிப் பாதையில் பலரும் பங்களிப்புச் செய்திருக்கிறார்கள்.
அப்போதைய ஆட்சியிலிருந்த எனதுதலைமைத்துவக் காலத்தில், பல சச்சரவுகளை முகாமை செய்து,சவால்களுக்கு முகம் கொடுத்து எப்படியாவது இந்த மண்ணுக்கான அபிவிருத்திகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.
முன்னொரு காலத்தில் இங்கு பொதுக்கூட்டமொன்றை நடத்துவதே பெரும் போராட்டமாக இருந்தது. ஆனால், இன்று அனைவரும் ஒன்றிணைந்து இத்திறப்பு விழாவை அமைதியாக நடத்துவது பெரும் நிம்மதியைத் தருகிறது.
நான் எப்போதும் சொல்வதைப் போல, ஏறாவூர் மக்கள் தொகையின் அடிப்படையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரைப் பெறுவது மிகவும் கடினமான காரியம். இருந்தபோதிலும், எனது தலைமைத்துவக் காலத்தில் நான்கு முறை இந்த ஊருக்கு தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை வழங்கி கௌரவித்திருக்கிறேன் .
இந்த ஊர் முன்னேற வேண்டும் என்பதற்காக நான் அமைச்சராக இருந்தபோது பல கோடி ரூபாய்களை ஒதுக்கீடு செய்தேன். குறிப்பாக, இந்தச் சந்தைக் கட்டிடத்திற்காக 125 மில்லியன் ரூபாயும்,நகரசபை அலுவலகக் கட்டிட அபிவிருத்திக்கு 25 மில்லியன் ரூபாயும், ஏறாவூர் லகூன் வீதிக்காக 60 மில்லியன் ரூபாயும், அஹமட் பரீட் விளையாட்டு மைதான சுற்றுமதிலுக்காக 40 மில்லியன் ரூபாயும் ஒதுக்கீடு செய்தோம். அத்துடன் கலாசார மண்டபக் கட்டுமானத்திற்காக 20 மில்லியன் ஒதுக்கினோம்.
முன்னாள் பிரதி அமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா வற்புறுத்திக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, சவுக்கடி கடற்கரைப் பகுதியில் மக்கள் உல்லாசமாக நேரத்தைக் கழிப்பதற்காக 25 முதல் 30 மில்லியன் ரூபாய் வரை நிதி ஒதுக்கி அபிவிருத்தி செய்தோம். சவுக்கடி கடற்கரை பூங்கா அபிவிருத்தி செய்யப்பட்டாலும், அந்தப் பகுதி தற்போது முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்ற ஆதங்கம் எழுந்துள்ளது. இது ஏறாவூர் பற்று பிரதேச சபைக்கு உட்பட்டது என்பதால், உள்ளூராட்சி ஆணையாளர் இந்தப் பராமரிப்பு விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
எங்களிடம் பல உத்தேசத் திட்டங்கள் இருந்தன. குறிப்பாக, காத்தான்குடி மற்றும் ஏறாவூருக்கான முழுமையான கழிவுநீர் சுத்திகரிப்புத் திட்டம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி, வெளிநாட்டு கடனுதவி உடன்படிக்கை செய்யப்பட்டும் கூட, நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக அது காலாவதியாகிப் போய் தடைப்பட்டு விட்டது.
பாசிக்குடாவைப் போன்றே புன்னக்குடா கடற்கரையும் சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றப்பட வேண்டும்.
முறக்கொட்டாஞ்சேனையிலிருந்து பாடசாலைக் காணியில் இராணுவ தளம் இருக்கக் கூடாது அதை இங்குள்ள எல் .ஆர்.சி. காணிக்குக் கொண்டு வருவோம் என முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, நாங்கள் பாதுகாப்பு சபை(Defence Committee)யிலும், இராணுவ தளபதியுடனும் பேசி அந்த விசேட பீரங்கி படையணி(Heavy Artillery Unit ) யை இங்கு கொண்டு வருவதைத் தடை செய்தோம்.அது செய்யித் அலி சாஹிர் மௌலானாவின் காலம்.
இங்கு அமையவிருந்த அந்த இராணுவ முகாமைத் தடுத்து நிறுத்தி, அந்த நிலத்தைப் பொதுப் பயன்பாட்டிற்காகப் பாதுகாத்தோம்.
அரைகுறையாக நிற்கும் திட்டங்களை ஒழுங்காகச் செய்து முடிப்பதற்கு இப்பிரதேசத்தின் அனைத்து தலைமைகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.சிறந்த ஏற்றுமதி வலயமாக இப் பிரதேசம் திகழ வேண்டும்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், ஏறாவூர் நகர சபை தவிசாளர்எம்.எஸ்.நழீம், இந்த மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், முன்னாள் பிரதி அமைச்சர் செய்யித் அலி சாஹிர் மௌலானா, முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும்,முன்னாள் அமைச்சருமான ஹாபிழ் நசீர் அஹ்மத் ஆகியோர் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியமாகும். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பஷீர் சேகு தாவூதும் இப் பிரதேச மக்களால் மறக்கப்பட முடியாதவர்.அபிவிருத்தியில் அவரது பங்களிப்பும் இருந்திருக்கிறது.
உல்லாச பயண ஆற்றங்கரை அபிவிருத்தி தொடர்பில் நகர சபை தவிசாளர் நழீம் நல்லதொரு திட்ட வரைவை தயாரித்திருக்கிறார்.
இறுதியாக, ஆளுநரின் கவனத்திற்கு ஒரு முக்கிய விடயத்தைக் கொண்டு வருகிறேன்.அதாவது, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கட்டுப்பாடுகளால் உள்ளூராட்சி சபைகள் பெரும் நிதிச் சிக்கலை எதிர்கொள்கின்றன. ஊழியர்களின் சம்பளத்தில் 40 வீதத்தை அந்தந்தச் சபைகளே பொறுப்பேற்க வேண்டும் என்பது ஏறாவூர் போன்ற சபைகளுக்கு பெரும் சுமையாகும். இந்த நிலை தொடர்ந்தால் அபிவிருத்தி வேலைகள் முடங்கி விடும். எனவே, ஆளுநர் இது குறித்துத் திறைசேரியுடன் பேசி ஒரு கொள்கை ரீதியான தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
(தொகுப்பு : "விருட்ச வேந்தன்")
நன்றி- "விடிவெள்ளி" (30.04.2026).


No comments