Breaking News

அரசாங்கத்தின் இலவச மின்சார விநியோகம். மக்களின் வாழ்வில் புதிய விடியல்.

எம்.யூ.எம்.சனூன்

நீண்ட காலமாக இருளில் மூழ்கி இருந்த புத்தளம்  618/பி கிராம சேவையாளர் பிரிவின் ரத்மல்யாய, முல்லை ஸ்கீம் பிரதேச மக்களின் மின்சார கனவு நனவாகியுள்ளது.


அரசின் விசேட வேலைத்திட்டத்தின் கீழ், ஒரு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், தெரிவு செய்யப்பட்ட வறிய குடும்பங்களுக்கு இலவச மின்சார விநியோகம் வழங்கும் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.


சுமார் 03 வருட காலமாக மின்சாரத்தை பெற்றுக்கொள்ள முயற்சி செய்தும் பயனளிக்காத நிலையில், 04 மாதங்களில் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஆசிரியர் ஐ.எம்.கியாஸ் இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்.


இதன் மூலம் மாணவர்களின் கல்வித் தடை நீங்கி, இரவு நேரங்களிலும் ஒளிமயமான கல்விச் சூழல் உருவாகியுள்ளது.


பின்தங்கிய கிராமப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும், இரவு நேர பாதுகாப்பை உறுதிப்படுத்துவதையும் இலக்காக கொண்டு இத்திட்டம் வழங்கப்பட்டுள்ளது.


இந்த உன்னத முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம். பைசல், மாகாண சபையின் மின்சார விநியோகத்திற்கு பொறுப்பான உதவி நிறைவேற்றுப்பணிப்பாளர் திருமதி கயானி, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் பார்த்தீபன், சமூர்த்தி உத்தியோகத்தர் றினோஸா, கிராம சேவகர் ஏ.டி.தெளபிகா மற்றும் பிரஜா சக்தி உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் அனைவருக்கும் பிரதேச சபை உறுப்பினர் ஐ.எம்.கியாஸ் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.







No comments