பொகவந்தலாவில் பஸ் விபத்து 34 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
(எம் எச் எம் சியாஜ்)
பொகவந்தலா பகுதியில் ஏற்பட்ட பஸ் விபத்தில் 34 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்து பொகவந்தலா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலங்கொடை பொகவந்தலாவ, பிரதான வீதியில் கெம்பியன் பகுதியிலிருந்து பொகவந்தலாவ நகரை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று செவ்வாய்க்கிழமை (28) காலை 7.40 மணியளவில் விபத்துக்குள்ளாகியள்ளது.
ராணிக்காடு மற்றும் கெம்பியன் பகுதியிலிருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றி வந்த இப்பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து பேரூந்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளன.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த சுமார் 34 மாணவர்கள் காயமடைந்து பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஐந்து மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




No comments