ஈரானின் தாக்குதலால் மன்னர் ஆட்சியை ஒழிப்பதற்கான அரிய சந்தர்ப்பத்தை அரபு மக்கள் பயன்படுத்துவார்களா ?
வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அனைத்து அரபு நாடுகளிலும் மன்னர் ஆட்சி நடைபெறுகிறது. அங்குள்ள மக்களுக்கு அரசியல் உரிமை இல்லை.
ஆட்சி அதிகாரம் அந்தந்த நாட்டின் குடும்பத்துக்கும், அதன் வாரிசுகளுக்கும் மாத்திரமே உள்ளது. அங்கு தேர்தல் முறை இல்லை. ஆட்சி தலைவர்களை தேர்வு செய்வதற்கோ, தேர்தலில் போட்டியிடுவதற்கோ, வாக்களிப்பதற்கோ மக்களுக்கு சந்தர்ப்பமில்லை.
மக்கள் தங்களது உரிமைக்காக போராடவோ ஆர்ப்பாட்டம் செய்யவோ முடியாது. அவ்வாறு போராட முற்பட்டால் அவர்களது கழுத்துக்கு உத்தரவாதம் இல்லை. இதுதான் அங்குள்ள நிலைமை.
மக்களின் விருப்பு, வெறுப்பு, அபிப்பிராம் எதனையும் மன்னர்கள் கண்டுகொள்வதில்லை. ஆட்சியாளர்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் அடிமையாக உள்ளதுடன், ஏகாதிபத்தியம் நாட்டின் வளங்களை சூரையாடி வருகின்றது.
ஆட்சியாளர்களின் இந்த நடைமுறையினை அங்குள்ள மக்கள் ஒருபோதும் விரும்பியதில்லை. ஆனாலும் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாத நிலையில் மக்கள் உள்ளனர்.
இவ்வாறான நிலையில்தான் தற்போது போர் ஆரம்பித்துள்ளது. அரபு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் இராணுவ நிலைகள் மீது ஈரான் ஏவுகணைகளை செலுத்தும்போது அரபு நாட்டு மக்கள் அடைகின்ற மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. தாக்குதல் நடைபெறுகின்றபோது அரபு மக்களின் ஆரவாரத்தின் மூலமாக இதனை அறிய முடிகின்றது.
ஈரானிய தொடர் ஏவுகணைகளினால் அரபு நாடுகளுக்குள் ஏற்படுகின்ற பதட்ட நிலமையினை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மக்கள் அனைவரும் வீதியில் இறங்க வேண்டும்.
அவ்வாறு வீதியில் இறங்கி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராட்டங்களை ஆரம்பித்து ஜனநாயக முறையிலான மக்கள் ஆட்சியை உருவாக்குவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.
அவ்வாறு போராட்டத்தினை முன்னெடுக்கின்றபோது, ஈரானின் உதவியுடன் போராட்டம் வெற்றியடைந்து மக்கள் அனைவரும் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்பதற்கான வாய்ப்புள்ளது.
இவ்வாறான எழுச்சிதான் 2011 இல் "அரபு வசந்தம்" என்ற பெயரில் துனுசியாவில் ஆரம்பித்து பல நாடுகளில் வெற்றியடைந்து. ஆனால் இடையில் அமெரிக்கா புகுந்து விளையாடியதன் காரணமாக இறுதியில் சிரியாவில் முற்றுப் பெற்றது.
முயற்சிப்பார்களா ? பொறுத்திருந்து பார்ப்போம்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

No comments