கற்பிட்டி கடற்பரப்பில் 1146 கிலோ கடல் அட்டைகளுடன் 07 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
இலங்கை கடற்படையினர் வியாழக்கிழமை (05) மற்றும் வெள்ளிக்கிழமைகளில் (06) கற்பிட்டி, முகத்துவாரம் மற்றும் கீரிமுண்டல் ஆகிய கடல் பகுதிகளை உள்ளடக்கி நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற சுமார் ஆயிரத்து நூற்று நாற்பத்தாறு (1,146) கிலோகிராம் உலர்ந்த கடல் அட்டைகளை ஏற்றிச் சென்ற மூன்று (03) டிங்கி படகுகளுடன் ஏழு (07) சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்தனர்.
வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜயவின் உச்சமுனை கடற்படைப் பிரிவினால் கற்பிட்டி முகத்துவாரம் கடல் பகுதியில் வியாழக்கிழமை (05) நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான டிங்கி (01) படகு சோதனை செய்யப்பட்டது. அந்த நேரத்தில், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற சுமார் நானூற்று பதினெட்டு (418) கிலோகிராம் உலர்ந்த கடல் அட்டைகளை ஏற்றிச் சென்ற ஒரு டிங்கி படகுடன் (01) இரண்டு (02) சந்தேக நபர்களை கடற்படையினர் கைப்பற்றினர்.
மேலும், வெள்ளிக்கிழமை
(06);கற்பிட்டி கீரிமுண்டல் கடல் பகுதியில் உச்சமுனை கடற்படைப் பிரிவு நடத்திய தேடுதல் நடவடிக்கையின் மூலம், இரண்டு (02) சந்தேகத்திற்கிடமான டிங்கிகள் கவனிக்கப்பட்டு சோதிக்கப்பட்ட போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் எழுநூற்று இருபத்தெட்டு (728) கிலோகிராம் உலர்ந்த கடல் அட்டைகளுடன் இரண்டு (02) டிங்கி படகுகள் மற்றும் ஐந்து (05) சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
இந்த நடவடிக்கைகளின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 24 முதல் 51 வயதுக்குட்பட்ட கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், வியாழக்கிழமை (05) கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், டிங்கி படகு மற்றும் உலர்ந்த கடல் அட்டைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டதுடன், மேலும் வெள்ளிக்கிழமை (06) கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், டிங்கி படகு மற்றும் உலர்ந்த கடல் அட்டைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மீன்வள மற்றும் நீர்வளத் துறை அலுவலகத்தில் ஒப்படைக்க கடற்படை நடவடிக்கை எடுத்தது.






No comments