JobVibe.lk - Sri Lanka Job Portal

இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான விளையாட்டு இராஜதந்திர உறவுகள் பலப்படுத்தப்பட்டன

(கற்பிட்டி நிருபர் சியாஜ்)

2026 டி20 உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தானின் மத்திய உள்நாட்டலுவல்கள் அமைச்சரும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) மற்றும் ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவருமான சையத் மொஹ்சின் ரசா நக்வி தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரக் குழுவினர், இலங்கையின் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே அவர்களைச் சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.


இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் எஸ். அச்சுதன் அவர்களும் கலந்துகொண்டார். இலங்கையில் நடைபெற்ற தீர்மானமிக்க இந்தியா - பாகிஸ்தான் உலகக் கிண்ணப் போட்டிக்கு வழங்கப்பட்ட சிறந்த விருந்தோம்பல் மற்றும் பொருத்தமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தமைக்காக பாகிஸ்தான் அரசாங்கம் மற்றும் கிரிக்கெட் சபை சார்பாக இலங்கை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மற்றும் அமைச்சர் சுனில் குமார கமகே ஆகியோருக்கு பாகிஸ்தான் அமைச்சர் தனது விசேட நன்றிகளைத் தெரிவித்தார்.


இரு நாடுகளுக்கும் இடையிலான விளையாட்டு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கு இந்தச் சந்திப்பு ஒரு சிறந்த அடித்தளமாக அமைந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


இச்சந்திப்பில் பாகிஸ்தான் தூதுவர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) பஹீம் உல் அஸீஸ், அமைச்சர் சௌத்ரி சாலிக் ஹுசைன், PCB தலைவரின் விசேட ஆலோசகர் அமீர் மிர், PCB செயற்பாட்டு அதிகாரி சுமைர் அகமது சையத், மொஹமட் சல்மான் லியாகத், பிரதித் தூதுவர் சுனைரா லத்தீப் மற்றும் PSL தலைமை நிர்வாக அதிகாரி சல்மான் நசீர் ஆகியோர் கலந்துகொண்டனர்.


இரு நாட்டு இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான விசேட பரிமாற்றத் திட்டங்களை ஆரம்பிப்பது குறித்தும், விளையாட்டுப் பணிப்பாளர் நாயகத்தின் வழிகாட்டலின் கீழ் எதிர்கால விளையாட்டுத் திட்டங்களுக்குத் தொழில்நுட்ப ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال