Breaking News

காஸா மக்களுக்கு தொடர்ச்சியாக உதவிகளை வழங்கும் சவூதி அரேபியா..!

✍️ எஸ். சினீஸ் கான்

பலஸ்தீனத்தின் காஸா பகுதி நீண்ட காலமாகவே கடுமையான மனிதாபிமான நெருக்கடியில் வாடிக்கொண்டிருக்கிறது. இடையறாத தாக்குதல்களால் அடிப்படை வசதிகளின் பற்றாக்குறை, உணவு மற்றும் மருத்துவ பொருட்களின் தட்டுப்பாடு, குடிநீர் இல்லாமை போன்ற சவால்கள் அப்பகுதி மக்களின் வாழ்வை துயரத்தில் ஆழ்த்தியுள்ளன. இந்த கடினமான சூழ்நிலையில், சவூதி அரேபியா மீண்டும் ஒரு முறை தனது மனிதநேயக் கையை நீட்டி, உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.


சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ் மற்றும் மரியாதைக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான் அவர்களின் வழிநடத்தலில் செயல்படும் King Salman Humanitarian Aid and Relief Centre (KSrelief), பலஸ்தீன மக்களின் துயரங்களை குறைக்கும் நோக்கில் மாபெரும் அளவில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. காஸா மக்களுக்கு உணவு, குடிநீர், மருந்து, தங்குமிடப் பொருட்கள் மற்றும் அவசர மருத்துவ உபகரணங்கள் நேரடியாக வழங்கப்பட்டுள்ளன. காஸா எல்லையில் அமைக்கப்பட்ட சவூதி நிவாரண முகாம்கள் வழியாக இந்த உதவிகள் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் மக்களிடம் சேர்க்கப்படுகின்றன.


மொத்தமாக 68 நிவாரண விமானங்கள் மற்றும் 8 கடல் கப்பல்கள் மூலமாக மனிதாபிமான உதவிகள் அனுப்பப்பட்டுள்ளன. 20 ஆம்புலன்ஸ் வாகனங்கள் காஸா பகுதியில் அவசர மருத்துவச் சேவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் 39,000  உணவு தொகுப்புகள் (Ready to eat meals) மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. தரை மற்றும் கடல் வழியாக அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்களின் மொத்த எடை 7,633.98 டன் ஆகும். இதனுடன், சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து 90 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இவை காஸா பகுதியில் நீடித்த நிவாரண மற்றும் மீள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டவை.


இந்த முயற்சிகள் அனைத்தும் சவூதி அரேபியாவின் நீண்டகால மனிதநேயப் பாரம்பரியத்தின் ஓர் அங்கமாகும். பல தசாப்தங்களாக பலஸ்தீன மக்களுக்கு கல்வி, சுகாதாரம், அடிப்படை வசதிகள் மற்றும் நிதி ஆதரவு போன்ற பல துறைகளில் உதவி செய்து வந்த சவூதி அரசு, இக்கடுமையான தருணத்திலும் தனது சகோதரத்துவ உணர்வை மறக்காமல் உலக நாடுகளுக்கே ஒரு முன்மாதிரியாக விளங்குகிறது.


இந்த உதவிகள் அரசாங்கத்தின் கொள்கை மட்டுமல்ல; அது முழு சவூதி மக்களின் இதயத்திலிருந்து எழும் கருணையின் சின்னமாகும். மனிதாபிமானம் எல்லைகளைக் கடந்து செல்லும் என்பதற்கான உயிரோட்டமான எடுத்துக்காட்டு இதுவாகும்.


இன்று காஸாவில் உணவுக்காக காத்திருக்கும் குழந்தைகளுக்கும், மருத்துவ உதவி தேடும் நோயாளிகளுக்கும், தங்குமிடம் இன்றி அலைந்து திரியும் குடும்பங்களுக்கும் சவூதி அரேபியாவின் இந்த உதவி உயிர்கொடும் ஆசியாய் மாறியுள்ளது. உலக நாடுகளின் பாராட்டைப் பெற்றுள்ள இந்த செயல், மனிதாபிமானத்தின் உண்மையான அர்த்தத்தை உலகத்திற்கு மீண்டும் நினைவூட்டுகிறது. காஸா மக்களின் துயரத்தில் தோள்கொடுத்து நிற்கும் இந்த நிவாரணப் பணி வரலாற்றில் ஒரு பொற்கால அடையாளமாகப் பதியும் என்பது உறுதி.




No comments