புத்தளம் செய்னப் பெண்கள் ஆரம்ப பாடசாலையில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களையும் பாராட்டிய வித்தியாசமான நிகழ்வு.
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் செய்னப் பெண்கள் ஆரம்ப பாடசாலையில் 2025 தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களையும் பாராட்டும் வித்தியாசமான நிகழ்வொன்று அண்மையில் (09) பாடசாலையின் பிரதான மண்டபத்தின் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் எச்.யூ.எஹியா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுதனை 05 ம் தரத்துக்கான பகுதித் தலைவரும், வகுப்பாசிரியர்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த பாராட்டு நிகழ்வுக்கு புத்தளம் கல்வி வலய ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் ஏ.ஏ.ஹபீல், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர் எம்.ஏ.ஹஸான், தரம் 05 க்கான கல்வி மேம்பாட்டுக்குழு தலைவி திருமதி தில்சாத் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இதில் விசேடமாக அதிபர் மற்றும் கல்வி அமைச்சின் பார்வையில் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த 152 மாணவர்களையும் பாராட்டி ஊக்கப்படுத்தியமை விசேட அம்சமாகும்.
அத்துடன் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற 33 மாணவர்களையும் பாராட்டி ஊக்கப்படுத்தியதோடு, பாடசாலையில் 176 புள்ளிகளைப் பெற்று புத்தளம் மாவட்டத்தில் முதலிடம் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்து சாதனை படைத்த தரம் 05 எப் மாணவி பிரகாஷ் அனோறா ஜேன் விசேடமாக பாராட்டப்பட்டதுடன், ஏனைய மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்காக அவருக்கு கிண்ணம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
இக்கிண்ணத்தை பாடசாலை அதிபர், ஆசிரிய ஆலோசகர், பகுதித் தலைவர், வகுப்பு பொறுப்பாசிரியர், பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதி ஆகியோர் இணைந்து வழங்கிவைத்தனர்.
மேலும் 2025 ம் வருடம் பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் விரைவில் சான்றிதழ்களும், பதக்கங்களும், பரிசுப்பொருள்களும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இறுதியாக அனைத்து மாணவர்களும் அனைவராலும் பாராட்டப்பட்டதுடன், அடுத்த இலக்கை நோக்கி செல்ல வேண்டும் என்ற அறிவுரைகளும் வழங்கப்பட்டன.






No comments