அணுகுண்டு தயாரிப்பதை தடுப்பதற்காகத்தான் ஈரான்மீது போர் தொடுக்கப்பட்டதா ? வேறு சூழ்சிகள் உள்ளதா ? போரில் தோல்வியடைந்தது யார் ?
மத்தியகிழக்கில் அமெரிக்காவின் தளம் இல்லாத நாடு மட்டுமல்லாது அங்குள்ள இயற்கை வளங்களை சுரண்ட முடியாத முதுகெலும்புள்ளவர்கள் ஆட்சி செய்யும் நாடு ஈரான் ஆகும்.
இயற்கை வளம் கொழிக்கும் பலம் பொருந்திய ஈரானின் இராணுவ கட்டமைப்பினை பலயீனப்படுத்தி ஏனைய அரபு நாடுகளை போன்று தமக்கு வாசியான பொம்மை ஆட்சியை நிறுவுவதென்றால் அங்கு ஆட்சி கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும்.
அத்துடன் ரஷ்யா – உக்ரேன் போரில் ரஷ்யாவுக்கு தேவையான ட்ரோன்கள், ஏவுகணைகள் வழங்கிவருவதனை தடுத்து நிறுத்துவதன் மூலம் ரஷ்யாவை தனிமைப்படுத்துவதற்கும் ஈரானின் வீழ்ச்சி உதவும் என்பது அமெரிக்காவின் திட்டமாகும்.
மேலும், ஹிஸ்புல்லாஹ், ஹமாஸ், ஏமன் ஹௌதிக்கள் மற்றும் ஈராக்கில் உள்ள ஏனைய இஸ்லாமிய இயக்கங்கள் இஸ்ரேலின் இருப்புக்கு பாரிய சவாலாக உள்ளது. இவ்வாறான இயக்கங்களை முற்றாக அழிப்பதென்றால் இவர்களுக்கு உதவிபுரிகின்ற ஈரானை வீழ்த்த வேண்டும் என்பது இஸ்ரேலின் நீண்டகால திட்டமாகும்.
அதற்காக ஈரானுக்குள் மொசாட் ஊடுருவி ஈரானின் இராணுவ கட்டமைப்புக்களை துல்லியமாக சிதைக்கும் திட்டங்களில் ஈடுபட்டதுடன், இஸ்லாமிய ஆட்சி கட்டமைப்பினை மாற்றுவதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் மிக ரகசியமாக செய்திருந்தது. அந்த நம்பிக்கையில்தான் ஈரானுக்குள் இஸ்ரேல் துணிந்து போரை ஆரம்பித்தது.
அமெரிக்க, இஸ்ரேல் கூட்டு திட்டமிடலை உலகிற்கு நியாயப்படுத்தும் நோக்கில் ஈராக்கில் சதாம் ஹுசைனிடம் பேரழிவு தரக்கூடிய ஆயுதங்கள் உள்ளதென்று உலகை நம்பவைத்து இராணுவ நடவடிக்கை மேற்கொண்டது போன்று ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கப்போகின்றது என்ற பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டது.
“இன்னும் இரண்டு வாரங்களில் ஈரான் அணுகுண்டினை தயாரித்துவிடும்” என்று கடந்த இருபது வருடங்களுக்கு முன்பிருந்தே இஸ்ரேல் பிரச்சாரம் செய்து வருகின்றது. அதனைத்தான் இன்று வரைக்கும் கூறுகின்றனர் ஆனால் ஈரான் இன்னமும் அணு குண்டினை தயாரித்ததாக இல்லை.
ஈரான் அணு ஆயுதம் உருவாக்குவதனை தடுத்து நிறுத்துவதென்றால் ஈரானின் அணு உலைகள்மீது மாத்திரம் தாக்குதல் நடாத்தியிருக்க வேண்டும். ஆனால் கடந்த 13.06.2025 அன்று அணு உலைகளுக்கு அப்பால் ஏராளமான இலக்குகளையும், இராணுவ தலைவர்களையும் குறிவைத்து ஈரான் முழுவதும் தாக்கியதன்மூலம் இஸ்ரேலின் உண்மையான நோக்கம் என்ன என்பது தெரிந்தது.
ஈரானின் பதில் தாக்குதலினால் இஸ்ரேலில் பாரிய அழிவுகள் ஏற்படுமென்றும், யூதர்கள் நாட்டைவிட்டு தப்பியோடுகின்ற நிலை உருவாகுமென்றும், ஈரானுக்குள் ஏற்படுத்தப்பட்ட மொசாட்டின் வலைப்பின்னல்கள் தோல்வி அடையுமென்றும் இஸ்ரேலும் அமெரிக்காவும் எதிர்பார்க்கவில்லை.
தங்களது சதித்திட்டங்கள் அனைத்தும் வெற்றியளிக்கும் என்ற நம்பிக்கையிலேயே டொனால்ட் ட்ரம்பும், பெஞ்சமின் நெதன்யாகுவும் போட்டிபோட்டுக்கொண்டு அறிக்கைவிட்டதுடன், தெஹ்ரானிலிருந்து மக்களை வெளியேறுமாறு கோரினர்.
போர் நடைபெற்றால் ஈரானில் சேதங்கள் ஏற்படுமென்று எல்லோரும் எதிர்பார்த்த ஒன்றுதான் ஆனால் காசா போன்று இஸ்ரேலில் இந்தளவுக்கு அழிவுகள் ஏற்படுமென்றும், வான்பாதுகாப்பு கட்டமைப்புக்கள் அழிக்கப்படுமென்றும் எவரும் எதிர்பார்க்கவில்லை.
அத்துடன் 12 நாட்கள் நடைபெற்ற இந்த போரில் ஈரானின் அணு மையங்கள் அழிக்கப்படவுமில்லை, ஆட்சி மாற்றம் ஏற்படவுமில்லை, இராணுவ கட்டமைப்புக்கள் சிதைக்கப்படவுமில்லை. மாறாக ஈரானிய மக்கள் ஒறுமைப்பட்டனர்.
மொத்தத்தில் இஸ்ரேலும், அமெரிக்காவும் என்ன நோக்கத்திற்காக போரை ஆரம்பித்தார்களோ அவர்களது எந்த நோக்கமும் நிறைவேறவில்லை.
எனவே இந்த போரில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதனைவிட இஸ்ரேலும், அமெரிக்காவும் படுதோல்வி அடைந்தது என்பது கள யதார்த்தமாகும்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments