சிறிய கட்சிகளை ஒடுக்கும் பாராளுமன்றத் தேர்தல் திருத்தச் சட்டத்தை ஹக்கீம் தலைமையில் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்;- மு.கா. பிரதிப் பொருளாளர் யஹியாகான் வேண்டுகோள்
(செயிட் ஆஷிப்)
உத்தேச பாராளுமன்ற தேர்தல் திருத்தச் சட்டம் என்பது சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளை ஒடுக்குவதற்காக கொண்டு வரப்பட்ட சட்டமாகும். இதனை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் பிரதிப் பொருளாளர் ஏ.சி. யஹியாகான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது;
கடந்த பாராளுமன்ற தேர்தலில் 3 ஆசனங்களைப் பெற்ற ஜே.வி.பி. கூட புதிய திருத்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் பாராளுமன்றம் நுழைய முடியாது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு கூட இது ஆபத்தானது. மலையக கட்சிகள் மற்றும் சிறிய தமிழ் கட்சிகளும் கூட தமது பாராளுமன்ற ஆசனங்களை இழக்கும் அபாயமுள்ளது.
இந்த விடயத்தில் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் மிக ஆழமான கருத்தாடல்களை மேற்கொண்டு வருகின்றார். சிறிய கட்சிகளின் தலைமைகளுடன் தனிப்பட்ட ரீதியில் சில சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளதாக அறிய முடிகின்றது.
எனவே அவர் தலைமையில் சகல சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகள் ஒன்றுபட்டு ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துடன் பேச்சு நடாத்தி இந்த தேர்தல் திருத்த சட்டத்தை அடியோடு இல்லாமலாக்க முயற்சிக்க வேண்டும்.
நாட்டில் எத்தனையோ வகையான பிரச்சினைகள் இருக்கத்தக்கதாக இதனை முதன்மைப்படுத்துவது அரசாங்கத்துக்கு ஆரோக்கியமானதாக இருக்க மாட்டாது என்றும் யஹியாகான் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments