கண்காணிப்பு அமைச்சர் பதவி யாருக்கு தேவை ? சில எம்பிக்களின் பேராசையினால் முழு சமூகத்தின் மானமும் கப்பலேறப் போகின்றது.

தன்மானம் உள்ளவர்கள் என்ற அடிப்படையில் அத்தனை முஸ்லிம் அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் தங்கள் அமைச்சு பதவிகளை ராஜினாமா செய்தார்கள்.

அத்துடன் வாகனம் உற்பட அமைச்சு மூலமாக கிடைக்கபெற்ற அத்தனை சலுகைகளையும் திரும்ப ஒப்படைத்தார்கள்.

ஆனால் அமைச்சர்களின் இணைப்பு செயலாளர்கள் மட்டத்தில் பதவி வகித்துவந்த சிலர் பதவி நிமித்தம் பாவித்து வந்த அரச வாகனங்களை ஒப்படைக்காமல், பிரதமர் மட்டத்தில் பின்கதவால் வியாபாரம் செய்வது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அத்துடன் இன்னும் ஓரிரு மாதங்களில் அமைச்சர் பதவிகளை எங்கள் தலைவர்கள் மீண்டும் பொறுப்பெடுத்து விடுவார்கள் என்றும், அதுவரைக்கும் கண்காணிப்பு அமைச்சர் பதவிகளை தங்களுக்கு வழங்குமாறும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

அத்துடன் தாங்கள் பாவித்து வருகின்ற அரச வாகனங்கள் உற்பட அசர சலுகைகளை திரும்ப ஒப்படைக்காமல் இருப்பதற்கு உதவி செய்யுமாறு கோரி அலறி மாளிகையின் வாசல்படி ஏறி வந்துள்ள தகவல்கள் வெளியாகி உள்ளது.

பதவிகளை ராஜினாமா செய்ததனால் முஸ்லிம் மக்கள் எமது தலைவர்களை தலையில் தூக்கி ஆராத்தி எடுக்கின்ற இந்த நேரத்தில், தலைவர்களின் எடுபிடிகளினாலும் சில பாராளுமன்ற உறுப்பினர்களினாலும் ஏற்படுகின்ற துரோக செயலினாலும், பேராசையினாலும் எமது முழு சமூகத்தின் மானமும் கப்பலேற போகின்றது.

முஸ்லிம் அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் பதவி விலகினாலும் ஏதாவது சலுகைகளை அவர்கள் அனுபவிக்கின்றார்களா என்று பேரினவாதிகள் உற்று நோக்கிக்கொண்டு இருப்பது இவர்களுக்கு விளங்காமல் உள்ளது.

இறுதியில் அத்தனை விமர்சனங்களையும் எதிர்கொள்வது தலைவர்கள்தான் என்பதனை மறந்துவிட கூடாது.

தலைவர்கள் அதிகாரத்தை விட்டு விலகினாலும், அவர்களது சில பாராளுமன்ற உறுப்பினர்களும் சில எடுபிடிகளும் அதிகாரம் இன்றியும், சலுகைகளை அனுபவிக்காமலும் இருக்கமாட்டார்கள். என்பது இந்த நடவடிக்கைகள் மூலம் புரிந்துகொள்ள முடிகின்றது.

அரச வாகனத்தை ஒப்படைக்க தவறியமையினால் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பியசேன அவர்கள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டது இவர்களுக்கு மறந்துவிட்டதா ?

எனவே அமைச்சு அதிகாரத்தை தூக்கி எறிந்தபின்பும் அதன் சலுகைகளை அனுபவித்து வருகின்ற எமது சில பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சில எடுபிடிகள் விடயத்திலும் தலைவர்கள் மிகவும் விழிப்பாக இருந்து இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறு நடவடிக்கை எடுக்க தவறினால் அது தலைவர்களை மட்டுமல்ல, முழு முஸ்லிம் சமூகத்துக்கும் அவமானத்தை ஏற்படுத்தி தரும் என்பதில் எந்தவித மாற்று கருத்துமில்லை. 

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

Previous Post Next Post

نموذج الاتصال