ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அழைப்பையேற்று தமிழ் நாட்டு சிறுபான்மை நலத்துறை மற்றும் வக்பு வாரிய அமைச்சர் ஏ.எம் சாஜஹான், இன்று (14) திங்கட்கிழமை மாலை கொழும்பை வந்தடைந்தார்.
இலங்கை வந்துள்ள தமிழக அமைச்சர் தலைமையிலான குழுவினரை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அக்கட்சியின் வெளிநாட்டு விவகார பணிப்பாளரும் முன்னாள் கல்முனை மேயருமான சிராஸ் மீராசாஹிப் ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றனர்.
தமிழக அமைச்சர் சாஜஹானுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் நாடு மாநில துணைச் செயலாளர் ஜமால் முஹம்மது இப்றாஹீம், தென்காசி மாவட்டச் செயலாளர் செய்யது பட்டானி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பு அணியான மாணவர் அணியின் மாநிலச் செயலாளர் சபீக் அஹமட் மற்றும் மூத்த ஊடகவியலாளர் திருச்சி எம்.கே. சாஹூல் ஹமீத் ஆகியோரும் இலங்கை வந்துள்ளனர்.



