(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
எஸ்.பி பௌண்டேஷன், அல்-பத்தாஹ் ஜும்ஆப் பள்ளிவாசல் மற்றும் அல்-பத்தாஹ் ஜனாஸா நலன்புரி அமைப்பு ஆகியன இணைந்து நடாத்திய உதிரம் கொடுப்போம் - உயிர் காப்போம்; மனிதநேயத்துடன் ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் சாய்ந்தமருது அல்-பத்தாஹ் ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்றது.
எஸ்.பி பௌண்டேஷனின் தலைவர் ஹக்கானி மஜீத் தலைமையில் இடம்பெற்ற இம்மனிதநேயப் பணியில் பொதுமக்கள், சமூக அமைப்புகள், நிறுவனங்கள், அல்-பத்தாஹ் ஜனாஸா நலன்புரி அமைப்பின் அங்கத்தவர்கள் உட்பட இளைஞர் அமைப்புகள், பள்ளிவாசல்கள் மற்றும் அனைத்து நலன்புரி நிறுவனங்களிலும் இருந்து கலந்து கொண்டு இரத்ததானங்களை வழங்கி வைத்தனர்.
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை இரத்த வங்கியில் பணிபுரியும் மருத்துவர்கள் குழாம் இச் செயற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டனர்.
62 பேர் இந்நிகழ்வில் இரத்ததானம் வழங்கியதோடு, அதில் 25 பெண்களும் முன்வந்து இரத்ததானம் வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.













