(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
அமெரிக்காவின் மொன்டானா தேசிய பாதுகாப்புப் படையின் பிரிகேடியர் ஜெனரல் ட்ரேஸ் தோமஸ் மற்றும் பிரிகேடியர் ஜெனரல் ரெனே டோவால் ஆகியோர் உள்ளிட்ட இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் இராஜதந்திர பிரதிநிதிகள் குழுவினர், உத்தியோகபூர்வ சந்திப்பொன்றிற்காக திங்கட்கிழமை (2026 ஆகஸ்ட் 31) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைப் பணியாளர் பிரதானி ரியர் அட்மிரல் ரவீந்திர திசேராவை சந்தித்தனர்.
அதற்கமைய, அமெரிக்காவின் மொன்டானா தேசிய பாதுகாப்புப் படையின் தலைமையில் இலங்கையில் நடாத்தப்படவுள்ள 'Atlas Angel II' மனிதநேய உதவி மற்றும் பேரிடர் நிவாரணப் பயிற்சி வேலைத்திட்டம் தொடர்பாக, இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது கடற்படை தலைமை அதிகாரிக்கும் மொன்டானா தேசிய பாதுகாப்புப் படையின் பிரதிநிதிகளுக்ககும் இடையில் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.
மேலும், மனிதநேய உதவி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளின் போது, அமெரிக்க மற்றும் இலங்கை ஆயுதப்படைகளுக்கு இடையிலான நடைமுறை ரீதியிலான ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர வினையாற்றலை வலுப்படுத்தும் நோக்கில் நடத்தப்படவுள்ள இந்த பயிற்சி தொடர்பான கலந்துரையாடலைத் தொடர்ந்து, இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பிற்கும் இடையில் நினைவுக் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.







