இன்றைய (19) பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கல்முனை வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களின் சீருடை விவகாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தற்காலிக இடமாற்றங்களை வழங்காமல் சுற்றறிக்கைத் திருத்தங்களூடாக அரசாங்கம் உடனடியாக கொள்கை ரீதியான நிலையான தீர்வை வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
அவர் தனதுரையில்,
ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் சுகாதார அமைச்சரைச் சந்தித்ததைப்போன்று, நேற்றுக்காலையில் எதிர்த்தரப்பு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அமைச்சரைச்சந்திப்பதற்கான வாய்ப்பைப் பெற்றிருந்ததாகத் தெரிவித்தார்.
அச்சந்திப்பின் போது, இந்த இடமாற்றம் என்பது தற்காலிகமானது தான். இது நிரந்தரத்தீர்வல்ல என்று அமைச்சர் கூறியிருந்த போதிலும், நாங்களும் நண்பர் ஆதம்பாவா போன்றவர்களும் எதிர்பார்ப்பது என்னவென்றால், இச்சீருடை விவகாரத்தில் முஸ்லிம் தாதி உதவியாளர்கள் மாத்திரமல்ல, சுகாதாரச் சேவையில் பணியாற்றுகின்ற அனைத்து முஸ்லிம்களுக்கும் அவர்களின் கலாசார அடையாளத்தைப்பேணுகின்ற அடிப்படையில் ஆடை அணிந்து வருவதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டுமென்பதை அரசாங்கம் அங்கீகரிக்கிறதா? என்பதை வெளிப்படையாக குறிப்பிட வேண்டும்.
ஏனென்றால், இது தான் இன்று இச்சிக்கலுக்கு மூலக்காரணமாக இருக்கிறது எனச்சுட்டிக்காட்டிய அவர், அரசாங்கம் இவ்விவகாரத்தில் முஸ்லிம்கள் பக்கத்திலுருக்கின்ற நியாயத்தை ஏற்றுக்கொண்டு, தாதி உதவியாளர்கள் மாத்திரமல்லாது, அரசு சேவையில் அனைத்திடங்களிலும் சீருடைகள் சம்பந்தமான சுற்றறிக்கைகளுக்கமைவாகவும் கலாசார சமய ஏற்பாடுகளுக்கமைவாகவும் ஆடை அணிந்து வருவதற்கு தகுந்த துறைகளில் பாரிய பாதிப்பில்லாத விவகாரங்களுக்கு இடமளிப்போம் என்ற கொள்கை ரீதியான முடிவை அரசாங்கம் எடுத்து விட்டது என்ற செய்தியையே எதிர்பார்ப்பதாகக்கூறினார்.
அத்துடன், சமூக வலைத்தளங்களின் கருத்துப் பரிமாற்றங்களைப் பார்க்கும் போது, இச்சிக்கலைத் தொடர்ந்து வைத்திருப்பது நாகரிகமானதல்ல. ஆபத்தானது என்றும் தெரிவித்த அவர், அண்மையில் ஒரு பொது நிகழ்ச்சியில் "முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்" என்று கூறியதன் பின்னணியை விளக்கினார்.
சுகாதார சேவையில் உள்ளூர் நிர்வாகம் என்ற முள்ளால் உருவான பிரச்சினையை, அரச மேலிடம் என்ற அடுத்த முள்ளைப்பயன்படுத்தித்தான் எடுக்க வேண்டுமென்றும், அரசாங்கத்தின் தலையீடு இதனை முளையிலேயே கிள்ளியெறிவதாக இருக்க வேண்டும். சுற்றறிக்கையிலுள்ள குறைபாடுகளை நீக்கக் கொள்கை ரீதியாக முடிவெடுத்து விட்டோம் என அறிவிப்பது, சில நாட்கள் தாமதமானாலும் பதற்றத்தைத்தணிப்பதற்கு அவசியமானது என்றும் வலியுறுத்தினார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
2019ம் ஆண்டின் 13ம் இலக்க பொது நிர்வாகச் சுற்றறிக்கையைச்சுட்டிக்காட்டி பேசினார்.
இச்சுற்றறிக்கை சுகாதாரத்துறைக்கும் பொருந்தக்கூடிய மேலதிகச்சுற்றறிக்கை என்றும், பொதுச்சேவையின் கண்ணியத்தைப்பேணும் வகையில் அதிகாரிகள் எவ்வாறான கண்ணியமான ஆடைகளை அணிய வேண்டுமென்பது அதில் தெளிவாகக்குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
பொதுப்பாதுகாப்பைக்கருத்திற்கொண்டு காதுகள் தவிர்த்து முகத்தை முழுமையாக வெளிப்படுத்தும் வகையில் ஆடை இருக்க வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், உட்பிரிவு 4-இல் குறிப்பிட்டவாறு ஆடை வழக்கங்களின் போது கலாசாரத்திற்கமைவாக மேலதிக ஆடைகளை அணிய அனுமதியுண்டு என்பதையும் நினைவூட்டினார்.
2022 இல் இச்சுற்றறிக்கையை மாற்றுவதற்கு எடுத்த தீர்மானத்தை வாய்ப்பாகப் பயன்படுத்தித்தான் கல்முனை வைத்தியசாலை நிர்வாகம் இந்த நெருக்கடியை உருவாக்கியுள்ளதென்பது மிகத்தெளிவான விடயம். பழைய சுற்றறிக்கையை மீண்டும் கொண்டு வருவதாக அறிவித்து அதை இரத்துச்செய்தாலே இத்தகைய பாரிய குழப்பத்தைத் தவிர்க்க முடியுமென்றும் தெரிவித்தார்.
மேலும், கல்முனையில் ஆங்காங்கே இன முரண்பாடுகள் இருந்தாலும், கல்முனை வடக்கு வைத்தியசாலையில் ரமலான் காலத்தில் முஸ்லிம்கள் கூட்டாக நோன்பு திறப்பதற்கும், அனைத்தின சகோதரர்களும் சேர்ந்து நோன்பு திறப்பதற்கும் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்ததையும், தொழுகைக்கான அறையை ஒதுக்கீடு செய்திருந்ததையும் பாராட்டி வரவேற்பதாகக் கூறினார்.
குற்றங்களை மட்டும் சொல்லிக்கொண்டிருக்காமல் தவறைத் திருத்த வேண்டுமெனக் குறிப்பிட்ட அவர், சுகாதார ஊழியர்களைப் பயன்படுத்தி வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்வதும் செய்தியாளர் சந்திப்புகளை நடத்துவதும் ஒழுக்காற்று நடவடிக்கைக்குரிய விடயமாகும் என்றார்.
யார் தண்டிக்கப்பட வேண்டுமென்பதை விட, சேவைக்கு வந்து ஓரிரு நாட்களிலேயே பலவந்தமாக இடமாற்றம் செய்யப்பட்ட இந்த உதவியாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி உடனடியாக நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
பொதுச்சேவைக்குள் அனைத்தினங்களையும் உள்வாங்கும் வகையில் நெகிழ்வுத்தன்மை இருக்க வேண்டுமென சுட்டிக்காட்டிய அவர், இலங்கையில் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு வெறும் 32 சதவீதமாக மிகக்குறைவாகவுள்ளது. ஆடைத்தொழிற்சாலைகள் இல்லையென்றால் இது இன்னும் குறைவாகிவிடும் என்றும் கூறினார்.
இது நேபாளத்தை விடக்குறைவு என்றும், நம்மை விடக் குறைவாக பாகிஸ்தான் மட்டுமே உள்ளது. இது பொருளாதாரத்திற்குப் பாதிப்பானது எனப்பொருளாதார வல்லுநர்கள் கூறுவதாகவும் தெரிவித்தார்.
தற்போதுள்ள பெண் தொழிலாளர்களில் பௌத்தர்கள் 83 சதவீதமாகவும், இந்துக்கள் 10.6 சதவீதமாகவுமுள்ள நிலையில், முஸ்லிம்கள் வெறும் 4.3 சதவீதம் மட்டுமே உள்ளதாகவும், அவர்களும் பெரும்பாலும் கல்வித்துறையில் ஆசிரியர்களாக பணியாற்றுவதாகவும் குறிப்பிட்டார்.
தற்போது தான் முஸ்லிம்கள் தாதியர்துறைக்கு வரத்தொடங்கியுள்ள நிலையில், கிழக்கு மாகாணத்திலுள்ள சில வைத்தியசாலைகளில் பணி புரியும் பெண் ஊழியர்கள் தங்களது தலையை மூடி ஹிஜாப் அணிந்து ஆடை அணிவதை, அங்கிருக்கும் வைத்திய அதிகாரிகள் கண்டு கொள்ளாமல், அவர்களை அங்கனமே பின்பற்ற அனுமதித்து வருகிறார்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால், அதே ஊழியர்கள் வெளியிடங்களுக்குச் செல்லும் போது, ஆம்புலன்ஸ் வண்டிகளுக்குள்ளேயே தங்களது தலையை மூடியிருக்கும் ஹிஜாபைக் கழற்றி விட்டு வேறு வைத்தியசாலைகளுக்குச் செல்ல நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்றும், இத்தகைய பயத்திலும் பீதியிலும் தான் அவர்கள் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்ற கவலைக்குரிய நிலைமையையும் அவர் அம்பலப்படுத்தினார்.
நேற்றைய தினம் தங்களைச் சந்தித்துப் பேசுவதற்கு வாய்ப்பளித்த சுகாதார அமைச்சருக்கு நன்றி தெரிவித்த அவர், அரசாங்கம் இவ்விவகாரத்தில் வெறும் தற்காலிகமான நடவடிக்கைகளை எடுத்து "சீலைக்கு மேலே சொறிகிறது" எனப்பொருள் கொள்ளாத வகையில், உண்மையிலேயே நிலையான தீர்வைத்தருவதற்கு தயாராக இருக்கிறது என்பதை வெளிப்படையாகச்சொல்ல வேண்டுமெனக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
(நிசப்தம்)
