(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி பொலிஸ் பிரிவில் உள்ள மக்கள் சபை, சிவில் பாதுகாப்பு அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பிரஜா சக்தி தலைவர்களுடனான விஷேட கலந்துரையாடல் ஒன்று கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கபில பிரேமதாசவின் தலைமையில் வெள்ளிக்கிழமை (07) நடைபெற்றது.
இதில் புதிதாக கடமைப் பொறுப்பேற்றுள்ள கற்பிட்டி உதவி பொலிஸ் அத்தியட்சகர் குமார தாச, கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.ஜீ.எஸ் சுசந்த கற்பிட்டி பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு பிரிவின் குழுத் தலைவர் பத்திரண ஆகியோர் கலந்துகொண்டனர்.
கற்பிட்டி பிரதேசத்தில் காணப்படும் போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் குற்றங்களைத் தடுப்பதற்கு கற்பிட்டி பொலிஸாருடன் பொதுமக்கள் எவ்வாறு இணைந்து செயல்பட வேண்டும் என்பது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் கற்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வரும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் செல்வாக்கிற்கு அடிபணியாமல் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்துவது கற்பிட்டி பொலிஸாரின் பொறுப்பு என்றும், போதைப்பொருள் மற்றும் சட்ட விரோத கடத்தல்களை ஒழிப்பதற்காகக் கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கபில பிரேமதாச மேலும் தெரிவித்தார்.
போதைப்பொருள் அற்ற நகராக கற்பிட்டி பிரதேசத்தை உருவாக்குவதற்கு பொலிஸாருடன் பொது மக்களும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு இக் கலந்துரையாடலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.




