நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் பிரதமரிடம் கேள்வி
நாட்டின் ஜனநாயகம், நல்லாட்சி மற்றும் சமூக நல்லிணக்கத்துடன் தொடர்புடைய முக்கிய விடயமொன்றை முன்வைத்து, நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கௌரவ பிரதமர் அவர்களிடம் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் முக்கிய கேள்விகளை இன்று (19) முன்வைத்தார்.
🔹 தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் முக்கியத்துவம்
எல்லை நிர்ணயம் என்பது வெறுமனே ஒரு நிர்வாக நடவடிக்கை அல்ல. அது தேர்தல் பிரதிநிதித்துவம், அரசியல் சமநிலை மற்றும் சிறுபான்மை சமூகங்களின் ஜனநாயகப் பங்கேற்பு ஆகியவற்றுடன் நேரடியாகத் தொடர்புடைய முக்கிய விடயமாகும்.
🔹 முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம்
தற்போதைய தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதி ஒருவர் கூட இடம்பெறாதமை தொடர்பில் முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் எழுந்துள்ள நியாயமான கவலைகளை பிரதமரின் கவனத்திற்கு ஹிஸ்புல்லாஹ் அவர்கள் கொண்டு வந்தார்.
மேலும், நாட்டின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில் முக்கியமான ஆணைக்குழுக்கள் மற்றும் உயர்மட்ட நியமனங்களில் அனைத்து சமூகங்களுக்கும் நியாயமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
🔹 பிரதமரிடம் முன்வைக்கப்பட்ட முக்கிய கேள்விகள்:
1️⃣ தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இடம்பெறாதமை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?
2️⃣ எதிர்கால எல்லை நிர்ணய நடவடிக்கைகளில் முஸ்லிம் சமூகத்தின் நியாயமான கோரிக்கைகள் உரிய முறையில் பிரதிபலிக்கப்படுவதை உறுதி செய்ய அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்?
3️⃣ எதிர்கால ஆணைக்குழுக்கள் மற்றும் உயர்மட்ட நியமனங்களில் நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் அனைத்து சமூகங்களுக்கும் நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கான கொள்கை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா?
உண்மையான நல்லாட்சிக்கும் தேசிய ஒற்றுமைக்கும் நாட்டின் பன்முகத்தன்மையை மதித்து, அனைத்து சமூகங்களுக்கும் நியாயமான மற்றும் சமமான பிரதிநிதித்துவம் வழங்கப்படுவது அவசியம் என்பதை ஹிஸ்புல்லாஹ் அவர்கள் சுட்டிக்காட்டினார்.
-- ஊடகப்பிரிவு