(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
"டெங்கு இல்லாத கொழும்பை நோக்கி" (Towards a Dengue-Free Colombo) எனும் தொனிப்பொருளின் கீழ் ‘கிளீன் ஸ்ரீ லங்கா’ செயலகம், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மற்றும் இலங்கை பொலிஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு ஆகியவற்றால் நடைமுறைப்படுத்தப்படும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத் தொடருக்கு செவ்வாய்க்கிழமை (2026 ஜூலை 07) மூன்றாவது நாளாகவும் கடற்படையினர் தங்களது தீவிர பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
சுகாதார மருத்துவ அதிகாரிகள், பிரதேச செயலக கார்யாளயத்தின் அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்க உறுப்பினர்களுடன் இணைந்து, மேற்கு கடற்படைக் கட்டளைக்குட்பட்ட ஐம்பத்துக்கும் (50) மேற்பட்ட கடற்படை வீரர்கள் இந்த தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக பங்களிப்பு வழங்கியுள்ளனர். அதன்படி, சுகததாச உள்ளக விளையாட்டரங்கைச் சுற்றியுள்ள நாரஹேன்பிட்டி, வத்தளை, முகத்துவாரம், மட்டக்குளி, பொரளை, புறக்கோட்டை மற்றும் பாணந்துறை ஆகிய பகுதிகளில் உள்ள ஐம்பத்து இரண்டு (52) இடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஆயிரத்து இருநூற்று முப்பத்தொன்று (1,231) டெங்கு நுளம்பு இனப்பெருக்க இடங்கள் அடையாளம் காணப்பட்டதுடன் மேலும், இந்த விரிவான டெங்கு கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் டெங்கு கட்டுப்பாடு குறித்த எழுபத்து மூன்று (73) விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் செயல்படுத்தப்பட்டன.
இந்த தேசிய டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு இணையாக, இலங்கை கடற்படையின் பிற கட்டளைகளும் பல டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளதுடன், இதன் மூலம், சுற்றுச்சூழலை முறையாக ஆய்வு செய்து, டெங்கு நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும், கடற்படை முகாம்களை டெங்கு நுளம்புகள் இல்லாத பாதுகாப்பான மண்டலங்களாக மாற்றும் நோக்கில், அனைத்து கடற்படை முகாம் வளாகங்களிலும் தொடர்ச்சியான டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.










