எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பல்வேறு கிராம சேவையாளர் பிரிவுகளில் வரிய குடும்பங்களுக்கு அரசாங்க நிதி உதவியுடன் நிரந்தர வீடுகளை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் மற்றும் அடிக்கல் நடும் நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை (03) புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல் தலைமையில் இடம்பெற்றது.
இதன் பிரகாரம் புத்தளம் ரத்மல்யாய, மணல்தீவு (ரஹ்மத் நகர்), புத்தளம் கிழக்கு, செல்லங்கண்டல் ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் ஒரே நாளில் சுழற்சி முறையில் பாராளுமன்ற உறுப்பினரால் இவை ஆரம்பிக்கப்பட்டன.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் இந்த வீடுகள், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்நிகழ்வுகளில் புத்தளம் மாநகர சபை உறுப்பினர் இப்லான் அமீன், புத்தளம் பிரதேச சபை உறுப்பினர்களும், பிரஜா சக்தி தலைவர்களுமான இஸ்ஸதீன் கியாஸ், எம். ஜிப்ரி, இஷார, பிரஜா சக்தி தலைவி ரேஹினி, குறித்த பிரதேசங்களின் கிராம சேவையாளர்கள், தேசிய மக்கள் சக்தியின் கட்சி உறுப்பினர்கள், வீட்டு பயனாளிகள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் வீட்டுதிட்ட உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டார்கள்.












