(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
நீதிமன்ற வழக்கு விசாரணைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவுக்கு வந்ததையடுத்து, அரசினால் கைப்பற்றப்பட்ட 99 கிலோ 478 கிராம் எடையுள்ள அதிவேக ஹெரோயின் போதைப்பொருள் முழுமையாகத் தீயிட்டுக் கொளுத்திச் சாம்பலாக்கப்பட்டுள்ளது
புத்தளம் – வணாத்தவில்லு, லெக்டோ வத்தையில் (Lacto Estate) அமைந்துள்ள அதி நவீன தகனக் கூடத்தில் (Incinerator) இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போதைப்பொருள் அழிக்கப்பட்டது
இந்த அதிரடி நடவடிக்கையின் பின்னணியில் மிகக் கடுமையான பாதுகாப்புச் சங்கிலி இயங்கியது. மாரவில நீதிமன்றத்தின் காப்பகத்தில் (Archives) மிகவும் பத்திரமாக வைக்கப்பட்டிருந்த இந்த போதைப்பொருள் மூட்டைகள், மாரவில நீதவான் மற்றும் மாவட்ட நீதிபதி கிஹான் பஸ்நாயக்கவின் நேரடிச் சமுகமளிப்பில் சரிபார்க்கப்பட்டு வெளியில் எடுக்கப்பட்டன. அங்கிருந்து வணாத்தவில்லு வரை பொலிஸ் படையினரின் பலத்த பாதுகாப்பு வலயத்தின் மத்தியிலேயே இவை கொண்டு செல்லப்பட்டன.
முன்னதாக, போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் (PNB) அதிகாரிகளால் மாரவில பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நுட்பமான வீதிச் சோதனைகள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகளின் போதே இந்த பிரமாண்டமான ஹெரோயின் தொகுதி சுற்றிவளைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. சட்டப் போராட்டங்களின் முடிவில், குற்றவாளிகளுக்கான தண்டனைகள் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்தே, எஞ்சிய இந்த நச்சுப் பொருட்களை முற்றாக அழிக்க நீதிமன்றம் கட்டளையிட்டது.
அதிஉயர் வெப்பநிலை கொண்ட எரியூட்டும் இயந்திரத்திற்குள் போதைப்பொருள் மூடைகள் தள்ளப்பட்ட போது, அரச இரசாயன பகுப்பாய்வாளர் (Government Analyst) மற்றும் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் அந்த இடத்திலேயே நேரில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். விஷப் புகையைக் கூடச் சுற்றாடலுக்குப் பரப்பாத வகையில் பாதுகாப்பான முறையில் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
