Breaking News

கலாசார ஒற்றுமையை வளர்த்த புத்தாண்டு கொண்டாட்டம்.

எம்.யூ.எம்.சனூன்

வடமேல் மாகாணம், புத்தளம் மாவட்டம், சிலாபம் கல்வி வலயத்திற்குட்பட்ட மாதம்பை நகரில் அமைந்துள்ள அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவு தரம் இரண்டு மாணவர்களுக்காக “புத்தாண்டு காலம்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு சிறப்பு புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு அண்மையில் சிறப்பாக நடைபெற்றது.


பாடசாலை அதிபர் எஸ்.எல்.அன்வர் தலைமையில், பாடசாலையில் ஆரம்பப் பிரிவுக்கு பொறுப்பான உதவி அதிபர் ஜே.எஸ்.எப். ரினோசா  மற்றும் ஆரம்பப் பிரிவு பகுதி தலைவர் பீ.எம். பஸ்லியா பானு, ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் வகுப்பு ஆசிரியர்களான எஸ்.என்.எப்.ஷர்மிளா மற்றும் எம்.என்.எப்.நஸ்மா இவர்களின் பூரண முயற்சியுடன் நடைபெற்ற இந்நிகழ்வு, சுற்றாடல் பாடத்திட்டத்துடன் இணைந்த கற்றல் அனுபவமாக அமைந்தது.


நிகழ்வில் பௌத்த, இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ சமயங்களின் முக்கிய விழாக்கள் தொடர்பான அறிமுகங்கள், கலாசார நிகழ்வுகள் மற்றும் குழு செயற்பாடுகள் என்பனவும் இடம்பெற்றன. 


மேலும், மாணவர்கள் பல்வேறு சமயங்களின் வணக்கஸ்தலங்களுக்கு கல்விசார் பார்வைப் பயணமாகச் சென்று அவற்றின் வழிபாட்டு முறைகள் மற்றும் கலாசார மரபுகளை நேரடியாக அறிந்துகொண்டனர்.


மாணவர்களிடையே கலாசார வேறுபாடுகளை மதிக்கும் மனப்பாங்கையும் சமூக ஒற்றுமை உணர்வையும் வளர்த்த சிறப்பான நிகழ்வாக இது அமைந்ததுடன், ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோருக்கும் பாடசாலை நிர்வாகம் நன்றியைத் தெரிவித்துள்ளது.






















No comments