நாச்சிககள்ளியில் பரபரப்பு: இறால் பண்ணைக்கு அருகே தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
கற்பிட்டி, நாச்சிக்கள்ளி சுதுபியாகம குடியிருப்பு பகுதியில் உள்ள இறால் வளர்ப்பு பண்ணை ஒன்றிற்கு அருகாமையில்,ஓலைக் கொட்டிலில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை (03) மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது குறித்த குடியிருப்புப் பகுதிக்கு முன்புறமாக அமைந்துள்ள இறால் வளர்ப்பு பண்ணைக்கு அருகில் இருந்த ஓலைக் கொட்டிலில் குடும்பஸ்தர் (வயது 25) ஒருவர் தூக்கில் தொங்குவதைக் கண்ட பொதுமக்கள், இது குறித்து உடனடியாக கற்பிட்டி பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சடலத்தைக் கைப்பற்றி விசாரணைகளைத் ஆரம்பித்துள்ளனர்.
கொலையா? தற்கொலையா? என்ற கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் உயிரிழந்தவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தற்கொலையா அல்லது திட்டமிடப்பட்ட கொலையா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நீதிவான் விசாரணைக்காக சடலம் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேதப் பரிசோதனை திங்கட்கிழமை (04) இடம்பெற உள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments