Breaking News

ஆண்டின் சிறந்த விபரண கட்டுரை எழுத்தாளருக்கான “உபாலி விஜேவர்தன விருது” ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமருக்கு

ஆண்டின் சிறந்த விபரண கட்டுரை எழுத்தாளருக்கான “உபாலி விஜேவர்தன சிறப்பு விருது”வை, தமிழன் பத்திரிகைக்காக பிரபல ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர் அவர்கள் பெற்றுள்ளார். இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (Sri Lanka Press Institute) மற்றும் பத்திரிகை ஆசிரியர் சங்கம் என்பன இணைந்து கொழும்பு மௌன்ட் லவ்னிய ஹோட்டலில் நடத்திய 26 வது Journalism Awards - 2024  ஊடக விருது வழங்கும் வைபவத்தில் வைத்தே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 


தமிழ் ஊடகத் துறையில் தனித்துவமான எழுத்து நடையும், ஆழமான ஆய்வும், சமூக உணர்வும் இணைந்த விபரணக் கட்டுரைகள் மூலம் அவர் தொடர்ச்சியாக வாசகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். சமகால சமூக, அரசியல், பொருளாதார விடயங்களை மக்கள் புரியும் வகையில் தெளிவாகவும் தைரியமாகவும் வெளிப்படுத்தும் அவரது எழுத்தாற்றல், இந்த விருதுக்கான தேர்வில் முக்கிய காரணியாக அமைந்தது.


உண்மை, நியாயம், மக்கள் நலன் ஆகியவற்றை மையமாகக் கொண்டு எழுதப்படும் அவரது கட்டுரைகள், தமிழ் ஊடகப் பரப்பில் கருத்துச் சிந்தனையைத் தூண்டும் முக்கிய பங்களிப்பாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, ஒடுக்கப்பட்ட சமூகங்களின் குரலாகவும், பொதுமக்களின் பிரச்சினைகளை அதிகார மையங்களுக்குத் தைரியமாக எடுத்துச் செல்லும் ஊடகமாகவும் அவரது எழுத்துக்கள் விளங்குகின்றன.


“உபாலி விஜேவர்தன விருது” என்பது, இலங்கையின் ஊடகத் துறையில் தரமான விபரணக் கட்டுரைகளுக்கு வழங்கப்படும் ஒரு மதிப்புமிக்க தேசிய விருதாகும். அந்த விருதைப் பெறுவதன் மூலம், நூருல் ஹுதா உமர் அவர்களின் நீண்டகால ஊடகச் சேவையும், அயராத உழைப்பும் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


பல்வேறு தேசிய, மாகாண, மாவட்ட, பிரதேச அளவில் கௌரவங்களையும், விருதுகளையும் பெற்றுள்ள இவர் ஊடகவியலாளர் என்பதையும் தாண்டி எழுத்தாளர், கவிஞர், அறிவிப்பாளர் என பன்முக ஆளுமை கொண்டவராவார்.




No comments