JobVibe.lk - Sri Lanka Job Portal

கல்முனையில் கட்டாக்காலி மாடுகள் கைப்பற்றப்பட்டு, தண்டப்பணம் அறவீடு; கல்முனை மாநகர சபை அதிரடி நடவடிக்கை.!

(அஸ்லம் எஸ்.மெளலானா)

கல்முனை மாநகரப் பகுதிகளில் நடமாடிய கட்டாக்காலி மாடுகள் பல, கல்முனை மாநகர சபையினால் கைப்பற்றப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களிடம் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.


கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பொதுச் சந்தைகள் மற்றும் பிரதான வீதிகளில் நடமாடும் கட்டாக்காலி மாடுகளைக் கைப்பற்றும் நடவடிக்கை கடந்த சில நாட்களாக தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


இவ்வாறு கைப்பற்றப்பட்ட மாடுகளுக்கு தலா 5000 ரூபா வீதம் தண்டப் பணம் அறவிடப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஏலவே பிடிபட்ட மாடுகள் மீண்டும் பொது இடங்களில் நடமாடுமாயின் அவை மீண்டும் கைப்பற்றப்படுவதுடன் அவற்றின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, அரசுடமையாக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.


கல்முனை மாநகர பிரதேசங்களில் பிரதான வீதிகள், பொதுச் சந்தைகள், விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் பொது மக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் பெரும் தொல்லையாக இருப்பதுடன் வாகனப் போக்குவரத்துகளுக்கும் இடையூறாக அமைகின்ற அதேவேளை விபத்துகளும் நிகழ்கின்றன. குறிப்பாக மோட்டார் சைக்கிள்களில் பயணிப்போர் விபத்துக்குள்ளாகி காயமடைவதுடன் உயிராபத்தையும் எதிர்நோக்கியுள்ளனர்.


அத்துடன் இரவு நேரங்களில் பெரும் எண்ணிக்கையிலான கட்டாக்காலி மாடுகள் கூட்டம் கூட்டமாக நகரை ஆக்கிரமித்து, அசுத்தப்படுத்தி வருவதும் அதனால் துர்வாடை வீசுவதும் வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றது.


இவற்றைக் கருத்தில் கொண்டு கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு, அவற்றைக் கைப்பற்றி உரிமையாளர்களிடம் தண்டப் பணம் அறவிடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி தெரிவித்தார்.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال